நமக்கு எதிரி தமிழர்கள் அல்ல, தில்லிதான் – கன்னட அமைப்புகள் மனமாற்றம்-ஆழி.செந்தில்நாதன்


பெங்களூரில் கன்னட ரட்சண வேதிகே என்கிற கர்நாடக அமைப்பு நடத்திய ‘இந்தியாவில் மொழிச் சமத்துவத்தைக் கோருவோம்’ என்கிற தலைப்பில் நடந்திய வட்டமேசை கருத்தரங்கில், மொழி நிகர்மை உரிமை பரப்பியக்கம் (CLEAR) இன் சார்பாக கலந்துகொண்ட ஆழி.செந்தில்நாதன் எழுதியுள்ள பதிவில்…

கர்நாடகத்தில் கன்னட மொழி உரிமைக்காக போராடுகிற பலரும் கலந்துகொண்டார்கள். இரண்டு வீரசைவ துறவிகளும் கர்நாடக சாகித்ய பரிஷத் என்கிற முக்கிய இலக்கிய அமைப்பின் தலைவர்களும் கர்நாடக அரசின் மொழிக்கொள்கை அமைப்பான கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவரும் நிர்வாகிகளும் பல இலக்கிய, அறிவுஜீவி வட்டத்தினரும் திரைத்துறையினரும் கலந்துகொண்டார்கள். கர்நாடக திமுக கிளையின் தலைவர் ராமசாமி கலந்துகொண்டார். பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் பிரதிநிதிகள் உள்பட சுமார் 40க்கும் மேற்பட்ட உள்ளூர் தமிழர்கள் கலந்துகொண்டார்கள் என்பது மிகவும் சிறப்பானது. திமுக சார்பில் வருவதாக ஒப்புக்கொண்டிருந்த திருச்சி சிவா இறுதிநேரத்தில் வர இயலாமல் போய்விட்டது. அவர் வந்திருந்தால் நிகழ்ச்சியின் கன பரிமாணம் வேறாக இருந்திருக்கும். கேரள அமைப்பு ஒன்றின் பிரதிநிதி வந்திருந்தார். மகாராஷ்ட்டிராவிலிருந்து நவநிர்மாண் சேனையின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சந்தீப் தேஷ்பாண்டேயும் இளம் மராத்திய மொழியுரிமையாளர்களும் கலந்துகொண்டார்கள். Promote Linguistic Equality இன் உள்ளூர் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். கிளியர் அமைப்பின் சார்பாக மேற்கு வங்கத்திலிருந்து கோர்கோ சாட்டர்ஜி காணொளி மூலம் பேசினார். தலைவர் ஜோகா சிங் வாழ்த்து மடல் அனுப்பியிருந்தார். பலரும் பேசியதைப் போல, கர்நாடகத்தில் தற்போது அனைவரையும் ஈர்திருக்கும் மொழிப்போராட்ட சூழலில், இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை.

அண்மையில் பெங்களூர் மெட்ரோவான நம்மமெட்ரோவில் இந்தி திணிக்கப்பட்டிருந்தற்கு எதிராக நடந்த போராட்டங்களின் பின்னணியில் இந்த நிகழ்வைப் பார்க்கவேண்டும். அதுமட்டுமின்றி கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே பனபாசி பலகா, சாமான்ய கன்னடிகா, முன்னோட்டா போன்ற அமைப்புகள் நடத்திவரும் மொழியுரிமை தொடர்பான போராட்டங்களும் பரப்பியக்கங்களும் முயற்சிகளும் அபாரமானவை. அபாரமானவை என்கிற சொல்கூட அவ்வளவு போதுமானது அல்ல. பெரிய அளவுக்கு தாக்கத்தைச் செலுத்தியவை என்றும் சொல்லலாம். அனைத்திந்திய கட்சிகளால் ஆளப்படுகிற, வட இந்தியர்களின் கலாச்சாரம் நன்றாக ஊடுருவியுள்ள, உள்ளூர் மக்களுக்கு எதிராக பேசுவதையே தம் கடமையாக கொண்ட “கேஸ்ட்’மோபாலிட்டன்கள் நிறைந்த பெங்களூரில், கன்னட மொழியின் இடத்தை தக்கவைப்பதற்கான போராட்டம் என்பது கருவுருவாக்கம் கொள்வதே பெரிய விஷயமாகும்.
இன்று கர்நாடகத்தில் இந்திக்கு ஆதரவாக இருக்கிற ஒரே சக்தி இந்துத்துவா மட்டுமே. ஆர் எஸ் எஸ், பாஜக மற்றும் அவர்களுடன் இணைந்த சங் பரிவார் அமைப்புகள் மட்டுமே இப்போது தனியாக இந்திக்கு ஆதரவாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸில் பெரும்பகுதியினர் – குறிப்பாக இளம் தலைமுறை காங்கிரஸ்காரர்கள் – இந்தித் திணிப்பை எதிர்க்கத்தொடங்கிவிட்டார்கள். இந்நிகழ்வுக்கு அரசு சார்ந்த அமைப்பான கன்னட வளர்ச்சி ஆணையத்தினர் வருகை தந்ததே சித்தராமைய்யா அரசின் நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. சில நாட்களுக்கு முன்புதான், கர்நாடகத்தில் கன்னட மொழி அனைத்துவகை பள்ளிகளிலும் கட்டாயம் என்பதை சட்டமாக்கும் அறிவிப்பை அவர் வெளியிட்டார். மற்றொரு பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் மெல்ல தனது மொழிக்கொள்கையை மாற்றிக்கொண்டது.

கர்நாடகத்துக்கு கன்னடம் முதல்மொழி, ஆங்கிலம் துணைமொழி என்கிற இருமொழிக்கொள்கையை அந்நிகழ்வில் பேசிய ஒவ்வொருத்தரும் வலியுறுத்தனார்கள் என்பதிலிருந்து அது ஒரு பொதுக் கோரிக்கையாக இருந்ததை பார்க்கமுடிந்தது. திமுக, தமிழ்ச்சங்க பிரதிநிதிகளும் இருமொழிக் கொள்கையை முன்வைத்து, தமிழக உதாரணங்களைச் சுட்டிக்காட்டியபோது நல்ல வரவேற்பு இருந்தது.
இன்றைய மொழி அரசியலின் பல்வேறு கூறுகளையும் கிளியர் அமைப்பின் நோக்கங்களையும் மாநிலங்கள் இணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தையும் நான் பேசினேன். இன்று இந்தியாவில் மொழிப்போராட்டங்களை முன்னெடுப்பதில் கர்நாடகம் முன்னிலை வகிப்பதைப் பாராட்டி பேசினேன்.
கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் மேற்கு வங்கத்திலும் இன்று வெடித்திருக்கும் இந்த மொழிப்போராட்டம் மிகவும் ஆழமான பிரச்சினைகளின் வெளிப்பாடு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த மாநிலங்களில் பெரும்பாலும் பள்ளிகளில் இந்தி படிக்கிறார்கள் என்பதும் பெரு நகரங்களில் இந்தியில் பேசுவது சஜகமாக ஆகிவிட்டது என்பதையும் நாம் மறக்கவேண்டாம். ஆனாலும் இந்தித் திணிப்புக்கு எதிரான கோபம் இப்படி வெடித்துக்கிளம்புவது ஏன்?

மொழிப் பிரச்சினை என்பது வெறும் மொழிப் பிரச்சினை அல்ல. ஒரு நிலத்தில் வாழும் மக்களுக்குள்ள வாழ்வாதார உரிமைகளின் வெளிப்பாடாகவே மொழிப்பிரச்சினை வெடிக்கிறது. நமது பழைய மொழிப்போராட்ட வரலாறுகளும் பங்களாதேஷும் அதையே நிரூபிக்கின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை – தொழில், வணிகம், உயர்நிலை வேலைவாய்ப்பு, கீழ்நிலை வேலைவாய்ப்பு – என எல்லாத்துறைகளிலும் பனியாக்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் என்பது ஏற்றுக்கொள்ளைக்கூடிய அளவை விஞ்சி, சகித்துக்கொள்ளக்கூடிய வரம்பையும் மீறி, உள்ளூர் மக்களை புறக்கணிக்கும் அளவுக்கு வந்துவிட்டது. இதைக் கன்னடர்கள் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். பாஜக அரசு என்பது வட இந்திய மாநிலங்களின் நலன்களுக்காக தென் இந்திய மாநிலங்களை சுரண்டுகிற காலனியத்தன்மையுள்ள அரசாக மாறிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கன்னட ரட்சண வேதிகே ஆகட்டும், வேறு பல கன்னட அமைப்புகள் ஆகட்டும், அல்லது நிகழ்வில் கலந்துகொண்ட மகாராஷ்ட்டிரத்தின் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனையாக ஆகட்டும் – இது போன்ற அமைப்புகளும் அவர்களின் சித்தாந்தமும் செயல்படும் முறைகளும் இந்துத்துவ அமைப்புகளோடு ஒப்பிடத்தக்க நிலையில்தான் இருந்துவந்தன. இப்போது அதில் சிறிய மாற்றச் சலனங்களை பார்க்கமுடிகிறது. அத்துடன் கேஆர்வி, எம்என்எஸ் போன்ற அமைப்புகளை வெறுமனே இனவாத அமைப்புகள் என்று முத்திரைக்குத்தி ஒதுக்குவதன் மூலமாக அந்த மாநிலங்களில் உருவாகிவரும் புதிய சமூகச்சூழலை நாம் புரிந்துகொள்ள இயலாது என்றே நினைக்கிறேன்.

நிகழ்ச்சியில் நான் பேசும்போது, மாநிலங்களுக்கு இடையிலான பூசல் குறித்து “மிக மேலோட்டமாக” ஒரு கருத்தைத் தெரிவித்தேன். இந்த கூட்டத்துக்கு வந்திருந்த தமிழகம், மகாராஷ்ட்டிரம் ஆகிய இரு மாநிலங்களுடனும் கர்நாடகத்துக்கு பிரச்சினை உண்டு. நம்மிடம் காவிரி பிரச்சினை, மகாராஷ்ட்டிரத்துடன் பெல்காம் பிரச்சினை. “சகோதரர்களுக்கு இடையில்தான் சொத்துப் பிரச்சினை இருக்கும்” என்று நான் வாதிட்டேன். “ஆனால் அவர்கள் சகோதரர்கள்தானே” . அந்த வாதம் நன்றாக எடுபட்டது. நிகழ்வில் பேசிய பலரும் காவிரி, பெல்காம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் மொழிப்பிரச்சினையில் நாம் ஒன்று சேர்ந்தாகவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்த நிகழ்வின் அடிநாதமாக இருந்தது சுதந்திரத்தின் மீதான ஈர்ப்புதான். தன்னாட்சி, கூட்டாட்சி தொடர்பான முன்வைப்புகளும் ஆசைகளும்தான் என்றால் அதில் ஒரு துளிகூட மிகையில்லை. கன்னட நாட்டின் சுயாதிகாரத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசினார்கள்.

இந்தக் கூட்டத்துக்கு வாட்டாள் நாகராஜ்கள் அழைக்கப்படவில்லை என்பதை அறிக. அதுவெறுமனே உள்ளூர் அரசியல் அல்ல.

கன்னட ரட்சண வேதிகே போன்ற அமைப்புகளும்கூட காவிரி பிரச்சினையிலும் பெல்காம் பிரச்சினையிலும் இனவாதப் பாய்ச்சலுடன் பாய்ந்தவர்கள்தான் என்பதை நாம் அறிவோம். ஆனால் நமக்கு எதிரி தமிழர்களோ மராத்தியரோ அல்ல, தில்லிதான் நமக்கு நிஜமான எதிரி என்கிற கருத்தை மிகத்தீவிரமாக பரப்பிவரும் அமைப்புகள்தான் இப்போது கன்னட இன அரசியலில் பலம்பெற்றுவருகின்றன என்பதையும் நான் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இதுதான் காலத்தின் கட்டாயம்.
“தமிழர் எதிர்ப்பு என்ற ஒற்றை பெயரில் உருவாக்கப்பட்டதுதான் கன்னட இன அமைப்புகளின் அரசியல். ஆனால் அது இன்று வலுவிழந்துவருகிறது. தமிழர்களோடு இணைந்து செயல்படவேண்டும் என்பதுதான் இந்த தலைமுறையினரின் கோரிக்கையாக இருக்கிறது” என்று பனபாசி பலகா அமைப்பினர் என்னிடம் தெரிவித்தனர். காவிரி போன்ற பிரச்சினைகள் வந்தால் அது உருவாக்கும் உணர்ச்சிகரமான சூழலை எதிர்கொள்ளும் திறமை இந்த அமைப்புகளுக்கு இல்லை. ஆனால் மோதல்களால் பலனில்லை என்றும் பேசித்தீர்க்கவேண்டிய விஷயம் இது என்றும் அவர்கள் கருதத்தொடங்கியிருக்கிறார்கள்.

இங்கே ஒரு சம்பவத்தைச் சொல்லவேண்டும். மெட்ரோ போராட்டத்துக்கு ஆதரவு கோரி உள்ளூர் திமுக தலைவர்களைச் சந்தித்த கன்னட அமைப்பின் தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார்: “காவிரி பற்றி பேச்சு எழுந்தது. அப்போது திமுக பிரமுகர் ஒருவர் வட இந்தியாவைச் சுட்டிக்காட்டி பேசினார். கங்கை நதி நான்கு மாநிலங்களுக்கு பாய்கிறது. ஆனால் அவர்கள் சண்டைப் போட்டுக்கொள்வதில்லை. ஆனால் நாம் சண்டை போட்டுக்கொள்கிறோம்” என்று அந்த திமுக பிரமுகர் கூறினார்.”

இந்த வாதம் அவ்வளவாக பொருத்தமில்லை என்றாலும்கூட இது போன்ற உரையாடல்கள் சுமுகமான சூழலை உருவாக்குகின்றன. ஆதரவு அளிக்கிறோம் என்று கூறியது மட்டுமில்லாமல், திமுக தன் சார்பில் ஒரு போராட்டத்தையும் நடத்தியது. அது கன்னட அமைப்புகளிடம் வியப்பை ஏற்படுத்தியது.
பாகுபலி பட வெளியீட்டின்போது சத்தியராஜுக்கு எதிராக வாட்டாள் நாகராஜ் பிரச்சினையைக் கிளப்பியபோது, வாட்டாள் நாகராஜின் அணுகுமுறை கன்னடர்களுக்கு உதவாது என்று கூறி பல கன்னட அமைப்பின் பிரமுகர்கள் சமூக ஊடகங்களில் எழுதினார்கள். இதை நான் அப்போதே ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது சுட்டிக்காட்டினேன்.

அடுத்து ஒரு காவிரி முரண்பாடு உருவாகும்போது இந்த நல்லெண்ணம் நீடிக்குமா என்று நீங்களும் கேட்கலாம். எனக்கும் சந்தேகம் இருக்கிறது. ஆனால் தமிழர் கன்னடர் உறவில் பண்பளவிலான ஒரு மாற்றம் ஏற்படும் என உறுதியாக நம்புகிறேன். கைகளை பற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் என்னை ஆச்சரியப்படுத்தியது ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா அமைப்பின் பிரதிநிதி சந்தீப் தேஷ்பாண்டேவின் பேச்சுதான். இந்தி-இந்து-இந்துஸ்தான் என்கிற சிந்தாந்தத்தை பெயர் சொல்லி அவர் எதிர்நிலை எடுத்தபோது வாயைப்பிளந்தேவிட்டேன்.

“மகாராஷ்ட்டிரத்தைத் தாண்டி தான் இந்தி தெற்கே நுழையமுடியும், நாங்கள் வாயிற்காவலர்களைப் போல இருந்து இந்தித் திணிப்பை முறியடிப்போம்” என்று தேஷ்பாண்டே கூறினார்.

அப்போது எனக்கு கிளியரின் மகாராஷ்ட்டிரத்தூணாக இருந்துவரும் நண்பர் தீபக் பவார் ஒருமுறை கூறியது நினைவுக்கு வந்தது. நான் ஒருமுறை தீபக்கிடம் கேட்டேன் . “ஏன் மகாராஷ்ட்டிராவில் தேசிய இனப் பிரச்சினை இல்லை? அங்கே மராத்திய தேசியம் என்பது இந்துத்துவத்தன்மையுடன் இருக்கிறதே ஒழியே தனித்தன்மை வாய்ந்த முற்போக்கான மராத்திய தேசிய அரசியலாக இல்லையே”.

மும்பைப் பல்கலைக்கழக பேராசியரும் மகாராஷ்ட்டிராவின் நவீன வரலாற்றை நன்கு ஆய்ந்தவருமான தீபக் பவார் அதற்கு ஒரு விளக்கத்தைச் சொன்னார். “முகலாயர்களுக்கு எதிராக மராத்தியர்கள் போராடிய காலத்திலிருந்தே, இந்தியாவைக் காப்பாற்றும் முதல் வரிசை படைவீரர்கள் தாங்கள்தான் என்கிற எண்ணம் மராத்தியர்களுக்கு உண்டு. இந்திய தேசியத்தைக் காப்பாற்றுவதே மராத்திய தேசியம் என்ற ஒரு கருத்து இங்கே நிலவுவதற்கும் அதுவே காரணம்” என்றார் அவர். பாஜகவைவிட மிகமோசமான இந்துத்துவ கருத்துகளை சிவசேனா வெளியிட்டு வருவதற்கு அதுவே காரணம் என்று நாம் புரிந்துகொள்ளமுடிகிறது. அனைத்தளவாவிய முற்போக்கு மராத்திய தேசியம் என்று ஒன்று உருவாகமால் போவதற்கு இந்த வரலாற்று பின்னணி காரணமாக இருந்துவருகிறது. நாக்பூரும் மகாராஷ்ட்டிரத்தில்தானே இருக்கிறது!
ஆனால் ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளின் மீது ஏறி சவாரிசெய்யும்போது ஒன்று கவிழ்த்துவிடுகிறது. இதை மராத்தியர்கள் அண்மைக்காலமாக உணர்ந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் சிவசேனை பிரதான கட்சியாகவும் பாஜக ஜூனியர் பார்ட்னராகவும் இருந்த நிலை போய், இப்போது பாஜக பிரதான கட்சியாக மாறி சிவசேனை தன் இறுதிக்காலத்தை எண்ணிக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து பிரிந்த எம்என்எஸ்ஸிலும் வேறு பல மராத்திய அமைப்புகளிலும் உள்ள சிலர் தங்களுடைய இந்தியக் காதலை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் மும்பை, புனே மெட்ரோவில் மராத்தி ஒதுக்கப்பட்டதற்கு எதிராக அண்மையில் போராட்டம் வெடித்தது. நம்ம மெட்ரோ இந்தி பேடா என்று பெங்களூரில் போராட்டம் நடந்தே அதே சமயத்தில் ஆப்லி மெட்ரோ இந்தி நகு என்று புனேயில் போராட்டம் நடந்தது. எம்என்எஸ்ஸின் தேஷ்பாண்டேயை பின்பு தனியாக சந்தித்தேன். கிளியர் அமைப்புகளின் கோரிக்கைகளை வெளிப்படுத்தினேன் “நீங்கள் வெளிப்படுத்திய மொழிக்கொள்கைகள் மிகச்சிறப்பாக இருந்தன. நீங்கள் மும்பைக்குவந்து ராஜ் சாகிப்பை (ராஜ் தாக்கரே) சந்திக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார் தேஷ்பாண்டே. ஏற்றுக்கொண்டேன்.

மொழியுரிமை தொடர்பான கோரிக்கைகளோடு கூட்டம் நிறைவடைந்தது. தேசிய இனங்களுக்கிடையிலான உறவு மேம்படுவதற்கான கண்கொள்ளாக்காட்சியாக இது இருந்தது. உறவுகள் தொடரவேண்டும். அடுத்த ஆண்டு தமிழகத்தில் நாம் நடத்த திட்டமிட்டிருக்கும் தன்னாட்சி மாநாட்டில் பேச வருமாறு கன்னட ரட்சண வேதிகேயின் தலைவர் நாராயண கெளடவை அழைத்தேன். வருகிறேன் என்றார். தொடர்வோம்.

Leave a Response