
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிம்பு, சனவரி 29 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
சிம்பு பேசுகையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனாவில் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அமைதி முறையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் முடிவில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. பொதுவாக ஒருவரால் அரசியல் சட்டங்களை புரிந்துகொள்ள முடியாது. இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டவுடன் யாராவது ஒரு அரசு பிரதிநிதி மாணவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் சட்டத்தின் சாராம்சம் குறித்து பேசி, அவர்களிடம் விளக்கியிருக்கலாம்.
போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு காவல்துறை அவகாசம் அளித்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. இந்த போராட்டம் தனிப்பட்ட ஒருவரை முன்னிலைப்படுத்தி தொடங்கிய போராட்டம் கிடையாது. ஜாதி, மதம் என்பதையும் தாண்டி தமிழர்கள் என்ற உணர்வுடன் தொடங்கிய போராட்டம். இந்த போராட்டத்திற்கு மதசாயம் பூசக்கூடாது. மாணவர்களின் இந்த போராட்டத்தின் வெற்றி கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இந்த வெற்றியை கொண்டாடுவதா? கோபப்படுவதா? என்று தெரியாமல், எந்தவித அர்த்தமும் இல்லாமல் முடிந்தது வருத்தம் அளிக்கிறது. வன்முறையில் மாணவர்கள் ஈடுபட்டதாக கூறுவது முற்றிலும் தவறு.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கத்தான் மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ஆனால், அவர்களை கைது செய்தது எந்தவிதத்தில் நியாயம்? மீனவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை. அரசுக்கு நான் மூன்று கோரிக்கைகளை வைக்கிறேன்.
அதாவது, வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்களை விடுதலை செய்யமுடியாது என்றால், அவர்களின் போராட்டத்திற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன். அதனால், என்னையும் கைது செய்யுங்கள். மேலும், கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். மற்றொன்று, இந்த போராட்டத்தின் வெற்றியை கொண்டாட அரசு ஒருநாள் ஒதுக்கித் தரவேண்டும். கைதானவர்களை விடுவிக்கவில்லையெனில், அவர்களுக்காக அஹிம்சை வழியில் நான் போராடுவேன் என்றார்.
மேலும் அவர், வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மெரினாவில் 144 தடை உத்தரவு போடப்படுவதற்கு அவசியம் என்ன? என்பது உள்ளிட்ட அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளையும் முன் வைத்தார்.
இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சிம்புவுக்கு ஆதரவு பெருகிவருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி புகழ்பெற்ற சமூகச்செயற்பாட்டாளர்களும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி சுகுமாரன் வெளியிட்டுள்ள குறிப்பில், நடிகர் சிம்பு பேட்டியை கொஞ்ச நேரம் பார்த்தேன். அரசையும் காவல்துறையையும் வெளிப்படையாகவே கண்டித்தார். இது பாராட்டுக்குரியது. இசுலாமியர் போராட்டத்தில் கலந்துக் கொண்டது குறித்து தவறாக சித்தரிக்கப்படுவது பற்றியும் பேசினார். இசுலாமியர்கள் தமிழர்கள் இல்லையா? சென்னையில் வெள்ளம் வந்து போது இசுலாமியர்கள் பள்ளிவாசல்களில் மக்களைத் தங்க வைத்தனர். இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் என அனைத்து மதத்தினரும் தமிழர்களாக திரண்டுக் கலந்துக் கொண்ட போராட்டம் என்றெல்லாம் பேசினார். இன்றைய சுழலில் இதுபோன்ற மதநல்லிணக்கக் குரல்கள் அவசியமானது. சிம்புவுக்கு என் வாழ்த்துக்கள்…என்று தெரிவித்துள்ளார்.


