மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மையை கண்டறிந்து வெளியிட வேண்டும் என்று நடிகை கவுதமி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இது அ.தி.மு.க வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கவுதமி மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் “நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று நான் பிரதமரிடம் கேட்ட கேள்வி பலரின் குரலை பிரதிபலிப்பதாகும். ஜெயலலிதாவின் தொண்டர்கள், விசுவாசிகளின் கேள்வியாகும். இப்போது அவர்கள் என்னுடன் சேர்ந்து கேள்வி எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். எங்களுக்கு தேவை கேள்விக்கான விடை. என்ன நடந்தது என்கிற உண்மை. இந்த விஷயத்தில் வெளியில் தெரியாத பல மர்மங்கள் உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள எங்களின் மனவேதனை நீங்க உண்மை தெரிய வேண்டியது அவசியம். இதற்காக குரல் எழுப்பியதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்” என கூறியுள்ளார் கௌதமி.
விடைகேட்டு குரல் எழுப்பும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது. உண்மைய அறிதலும், பெறுதலும்தான் நமக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பையும் தரும். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பிரதமரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். உங்களிடமிருந்து பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இவ்வாறு கவுதமி கடிதம் எழுதியுள்ளார்.