ஓபிஎஸ்ஸை விட்டுவிட்டு திமுகவில் இணைந்தது ஏன்? – வைத்திலிங்கம் விளக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம். 4 முறை ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்துள்ளார். அதிமுக உட்கட்சிப் பூசலின் விளைவாக ஓபிஎஸ் ஆரம்பித்த அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவில் வைத்திலிங்கம் இருந்தார். ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக
இருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி ஒரு கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இன்னொரு கட்சியில் சேரக்கூடாது என்பதால் ஒரத்தநாடு சமஉ பதவி விலகிவிட்டு திமுகவில் இணைந்துள்ளார்.

இன்றுகாலை சட்டப்பேரவைக்குச் சென்று பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்.

அதன் பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்துக்குச் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம்,

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்பாடுகள் உகந்ததாக இல்லை.அதிமுக சுதந்திரமாகச் செயல்படவில்லை.சர்வாதிகாரமாகச் செயல்படுகிறது.
அதிமுகவில் சேருமாறு தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்பு வந்தது.நான் அங்கு தனியாக இணைய விரும்பவில்லை.பிரிந்தவர்கள் ஒன்றாகச் சேரவேண்டும் என்ற நோக்கில் இருந்த நான் அதிமுகவுக்கு தனியாகச் செல்லவில்லை.

அதேபோல், கூட்டணி தொடர்பான முடிவில் ஓபிஎஸ் தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்துள்ளேன்.ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் போற்றுகிறார்கள். எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்து மக்கள் மனதில் உள்ளார் மு.க.ஸ்டாலின். அதனால் அண்ணா தொடங்கிய தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response