
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் திருச்சியிலிருந்து மதுரை வரையிலான சமத்துவ நடைபயண தொடக்க விழா திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் நேற்று நடைபெற்றது.
இந்த நடைபயணத் தொடக்க விழாவில் திமுக கூட்டணிக்கட்சியினர் பங்கேற்ற நிலையில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான காங்கிரசுக் கட்சியினர் கலந்து கொள்ளவில்லை.
விழா அழைப்பிதழில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படம் இடம் பெற்றுள்ளதால் காங்கிரசுக் கட்சி பங்கேற்கவில்லை என்று சொல்லப்பட்டது.எனினும், விழா மேடை மற்றும் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் பிரபாகரன் படம் இடம்பெறவில்லை.
இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறும்போது, அழைப்பிதழில் பிரபாகரன் படம் இடம் பெற்றது குறித்து தவறான தகவல்களைச் சிலர் பரப்பி வருகின்றனர்.
காங்கிரசுத் தலைவர் இராகுல் காந்தி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரிடம் ஆங்கிலப் புத்தாண்டுக்கு
வாழ்த்துத் தெரிவித்து நான் செல்போனில் பேசியபோது, ‘பிரபாகரன் படம் இடம் பெற்றது குறித்து இங்குள்ளவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு பேசுகிறார்கள்’ என்றேன்.
அதற்கு அவர், ‘அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் பணிகளைப் பாருங்கள்’ என்று கூறினார்.
தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகையால் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. திருச்சி மாவட்ட காங்கிரசு
தலைவர்கள் வராதது ஏன்? என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


