தநா வாக்காளர் பட்டியல் முடக்கம் – மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

இந்திய ஒன்றியத்தின் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த வகையில்,தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அந்தமான் – நிகோபர், இலட்சத்தீவு, சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! என்று தலைப்பிட்டு அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது….

தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் – பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும். மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response