அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7 அன்று தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
ஜூலை 8 அன்று கோவையில் அவர் பரப்புரைப் பயணம் மேற்கொண்டார்.அன்று மாலை வடவள்ளி பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது….
கோயிலைக் கண்டாலே சிலருக்கு கண்ணை உறுத்துகிறது. அதில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். கோயில் கட்டுவதற்காக நல்ல உள்ளம் படைத்தவர்கள், தெய்வ பக்தி கொண்டவர்கள் எல்லாம் உண்டியலில் பணம் போடுகிறார்கள். அது அறநிலையத் துறைக்குப் போய்ச் சேர்கிறது. கோயிலை அபிவிருத்தி செய்து, விரிவுப்படுத்துவதற்குத்தான் நீங்கள் பணம் போடுகிறீர்கள். ஆனால் அந்தப் பணத்தை எடுத்துக் கல்லூரி கட்டுகிறார்கள்.
அறநிலையத் துறையில் இருந்து பணத்தை எடுத்து எதற்காக அதற்குச் செலவு செய்ய வேண்டும். கல்விக்கு செலவு செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. கல்வி என்பது முக்கியம். ஆனால் அந்தக் கல்வியை அரசாங்கத்தில் இருந்தே கொடுக்கலாம். ஏன் அரசாங்கத்திடம் பணம் இல்லையா? அதிமுக ஆட்சியில் இத்தனை கல்லூரிகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். அவை அனைத்தும் அரசாங்கப் பணத்தில் கட்டப்பட்டது. ஆனால் நீங்கள் அறநிலையத் துறை பணத்தை எடுத்து இதற்கு செலவழிப்பது எந்தவிதத்தில் நியாயம்? இவை அனைத்தையும்
சதிச் செயலாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். 10 கல்லூரிகளுக்குத் தேவையான பணம் அரசிடம் இல்லையா? சாதாரண கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பதற்கே அரசிடம் பணம் இல்லை என்றால் இந்த அரசாங்கம் நமக்கு தேவையா? என்று அவர் பேசினார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்தப் பேச்சுக்கு வெகுமக்கள் மத்தியில் கடும்எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஏழை, எளிய மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் அரசின் முயற்சியை வரவேற்பதற்குப் பதில் சதிச்செயல் என்று பேசுவது எப்படி நியாயமாகும்? என்றும், கோயில் பணத்தில் கல்லூரி கட்டினால் என்ன தப்பு? என்றும் ஏராளமானோர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.