பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு – அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை இராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

அதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங்களாக எடப்பாடியை மறைமுகமாக எதிர்த்து வரும் செங்கோட்டையனும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது….

தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் உள்ள 68,144 பூத்களுக்கும் தலா 3 மகளிர் உள்ளிட்ட தலா 9 நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டிலிருந்தே கூறி வருகிறேன். இப்பணியை வலுப்படுத்துவதற்காகவே கட்சி ரீதியிலான 88 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்தேன். மார்ச் 31 ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தேன். இருப்பினும் நேற்று நடைபெற்ற மாவட்டப் பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மாவட்டப் பொறுப்பாளர் கூட 100 சதவீதம் பணிகளை முடித்ததாகத் தெரிவிக்கவில்லை.

தேர்தலில் ஒரு கட்சியின் வெற்றிக்கு பூத் கிளை வலிமை முக்கியம். பூத் கிளை வலிமையாக இருந்தால்தான் அதிமுகவால் 2026 இல் ஆட்சியை பிடிக்க முடியும். அதனால் பணிகளில் அலட்சியமாக இருந்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். வரும் தேர்தல் நமக்கு சாதகமாக உள்ளது. திமுக மீது மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜகவும் சேர்ந்துள்ளது. இன்னும் பல கட்சிகள் கூட்டணியில் சேர உள்ளன. நிச்சயம் அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமையும்.

கடந்த தேர்தலில வெறும் 2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை இழந்தோம். அதில் கவனம் செலுத்தினாலே ஆட்சியைப் பிடித்துவிடலாம். இதை மனதில் வைத்து, மாவட்டச் செயலாளர்கள் உற்சாகமாகப் பணியாற்ற வேண்டும். இன்று முதலே உங்கள் தொகுதிகளில் கட்சிப் பணியை தேர்தல் பணியாக மேற்கொள்ள வேண்டும். பூத் கிளை நிர்வாகிகள் நியமனத்தை மே 15 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

பாஜவுடனான கூட்டணியைப் பொறுத்தவரை பாஜக தலைமை கொடுத்த நெருக்கடியின் காரணமாக கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. அதனால் கட்சித் தலைவர்களை உடனடியாக அழைத்து ஆலோசனை நடத்த முடியவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் கூட்டணிதான். அதேநேரம் அதிமுக கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ளதால், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர்,பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.அதனால், சில மாவட்டச் செயலாளர்களை தனியே அழைத்து எடப்பாடி பழனிச்சாமி சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அந்தக் கூட்டம் பரபரப்பாகக் காணப்பட்டது என்கிறார்கள்.

Leave a Response