தமிழர்கள் தங்கள் மொழி மீது காட்டும் அக்கறை நெகிழ்ச்சி தருகிறது – டென்மார்க்கைச் சேர்ந்த இணையநிறுவன தலைவர் பேட்டி

கைபேசிகளில் முதன்முதலில் தமிழை தெளிவாகக் காட்டிய ‘ஓபரா மினி’ தலைவர் லார்ஸ் பாயில்சன் சிறப்புப் பேட்டி

உங்களிடம் என்ன ஸ்மார்ட்போன் இருக்கிறது? ஆண்ட்ராய்ட்? ஐபோன்? விண்டோஸ் போன்? அதில் தமிழில் தகவல்களை படிக்க முடிகிறதா? நன்று.

ஸ்மார்ட்போன் இல்லாத காலகட்டத்தில் நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகப்படுத்தியிருக்கிறீர்களா? என்ன வகையான போன்? நோக்கியா? சாம்ஸங்? அதில் தமிழ் எழுத்துகள் வந்ததா அல்லது தமிழ் கட்டம் கட்டமாக தெரிந்ததா?

தமிழை அந்தக் காலத்தில் உபயோகப்படுத்தியிருந்தீர்கள் என்றால் உங்களுக்கு ‘ஓபரா மினி’யை தெரியாமல் இருந்திருக்காது. ஏன் இன்றைய ஸ்மார்ட்போன்களிலும் ஓபரா மினி இருக்கிறது. அலைபேசிகளில் முதன்முதலில் தமிழை தெளிவாக காட்டியது ‘ஓபரா மினி’தான்.

உலகெங்கும் 350 மில்லியன் பயனர்கள் இன்றும் பயன்படுத்துவது ‘ஓபரா மினி’. இந்தியா மட்டுமல்ல, ஆப்ரிக்க நாடுகளிலும் இதுவே பிரபலமாக இருக்கிறது. ஃபேஸ்புக் மற்றும் ‘ஓபரா மினி’ இணைந்து தொலைதொடர்பு நிறுவனங்கள் உதவியோடு வழங்கும் இலவச இணைய சேவை மூலமாகத்தான் ஆப்ரிக்கர்கள் இணையத்தையே பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

‘ஓபரா மினி’க்கு இந்தியாவில் அரை கோடி பயனர்கள் இருக்கிறார்கள். அவர்களில் வட இந்தியாவை விட, தென்னிந்தியர்கள்தான் அதிகம். இவர்களிலும் தமிழர்கள்தான் அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ‘ஓபரா மினி’யின் தலைவர் லார்ஸ் பாயில்சனை தொடர்புகொண்டோம். தமிழ்நாட்டு ஊடகமா என்று ஆச்சர்யத்துடனும், உற்சாகத்துடனும் உரையாட ஆரம்பித்தார்.

உங்களைப் பற்றி சொல்லுங்கள்..?

பிறந்தது வளர்ந்தது எல்லாம் டென்மார்க் நாட்டில். அங்கு வியாபார மேலாண்மை கல்வி படித்தபின் அதே துறையில் முதுகலை பட்டம் பெற்றேன். 1997ல் நார்வேக்கு குடிபெயர்ந்து, அந்த நாட்டு பெண்ணை திருமணம் செய்தேன். எனக்கு மூன்று குழந்தைகள். ‘ஓபரா’ தலைவராக 2010ல் பதவியேற்றேன். அதற்கு முன் ஓபரா சாஃப்ட்வேர் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையின் தலைவராக இருந்தேன். ஓபராவில் இணையும் முன் லெகோ நிறுவனத்தின் தலைவராக இருந்தேன். லெகோ என்பது சிறிய ப்ளாஸ்டிக் பொம்மைகளை இணைத்து பெரிதாக உருவாக்கும் விளையாட்டு.

ஓபராவுக்கும் தமிழர்களுக்குமான பிணைப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஓபரா நிறுவனத்தில் இந்தியாவை பற்றி மிக நல்ல அபிப்ராயம் உண்டு. குறிப்பாக தமிழர்கள் தங்கள் மொழி மீது கொண்ட பற்று பற்றி பல கதைகள் உண்டு. அலைபேசிகளில் இணையம் வந்த காலத்தில் அதில் நாங்கள் இணைய வசதி கொண்ட ‘ஓபரா மினி’யை அறிமுகப்படுத்தியபோது தமிழர்கள் பல முனைகளில் இருந்தும் எங்களை தொடர்பு கொண்டார்கள். இந்தியா, இலங்கை மட்டுமல்ல, உலகின் பல மூலைகளில் இருந்தும் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள்.

தமிழ் மொழியை தங்கள் அலைபேசிகளில் சரியாக பார்க்கமுடியவில்லை, ஏதாவது செய்ய முடியுமா என்பதுதான் அவர்களின் ஒரே கோரிக்கை. அதனால் ஓபரா மினியில் பல மாற்றங்கள் செய்து, அவர்கள் பார்க்கும் இணைய தளத்தை எங்கள் சர்வர்களில் ரெண்டரிங் செய்து, படங்களாக அவர்களுடைய அலைபேசிகளுக்கு அனுப்பும் OBML என்ற வசதியை கொடுத்தோம். நன்றி சொல்லி வந்த ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களுக்கு பதில் கடிதம் அனுப்ப ஒருவரை தனியாக நியமித்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மற்ற எல்லா மொழிகளை விட யுனிகோடு வசதியை முதன் முதலில் பெற்றது தமிழ் மொழிதான். தமிழர்கள் தங்களுடைய மொழி மீதும், அந்த மொழியை நவீன ஊடகங்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று மெனக்கெடுவதையும் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழ் கலாசாரம் பற்றி அறிந்திருக்கிறீர்களா?

நன்றாகவே. தத்துவம், சமூகம், தொழில்நுட்பம் என தமிழர்கள் சாதிக்காது என்ன இருக்கிறது? இன்றைய கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையில் இருந்து (அவர்கள் எங்களுக்கு போட்டியாளர்கள் என்றாலும் கூட – புன்னகைக்கிறார்), சமூக மாற்றங்களை கொண்டு வந்த தந்தை பெரியார், இரண்டடியில் பல வாழ்வியல் கருத்துகளை சொன்ன திருவள்ளுவர் வரை பலரையும் அறிந்திருக்கிறேன்.

குறிப்பாக இந்தியாவில் நிலவிய பெண்ணடிமைத்தனம், சாதி அமைப்பு பற்றி ஐரோப்பாவில் பாட திட்டங்கள் உண்டு. அதில் பெரியார் நிகழ்த்திய சமூக மாற்றங்களை பற்றியும், அவை தமிழ்நாட்டில் மட்டும் இன்றும் நடைமுறையில் உள்ளது பற்றியும் படித்திருக்கிறேன்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டையும், கபடி போட்டிகளையும் வீடியோவில் பார்த்திருக்கிறேன்.

திருக்குறளை ஆங்கில வடிவத்தில் படித்திருக்கிறேன். குறிப்பாக இந்த பகுதி… With rising flood the rising lotus flower its stem unwinds; The dignity of men is measured by their minds (வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு என்ற குறளின் ஆங்கில வடிவத்தை கோடிட்டு காட்டுகிறார்.)

இணைய சமநிலை பற்றி உங்கள் கருத்து என்ன?

இணையம் எல்லாருக்கும் பொதுவானது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. இன்றைக்கு சுகாதாரமான குடிநீர், கலப்படமற்ற காற்று போல அனைவருக்கும் பொதுவானதே இந்த இணையம்.
உங்கள் நாட்டில் இருக்கும் தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) போல எங்கள் நாட்டிலும் உண்டு. அவர்கள் தொலைதொடர்பு நிறுவனங்களை கடுமையாக கண்காணித்து, அனைவருக்கும் இணைய இணைப்பு முறையான வகையில் கிடைப்பதை உறுதி செய்கிறார்கள்.

இப்போது நீங்கள் சந்திப்பதை போல தொலை தொடர்பு நிறுவனங்கள் அதிக கட்டணத்தை இணைய சேவைக்கு உயர்த்தியது இங்கும் நடந்தது. அப்போது நீதிமன்றங்கள் தலையிட்டு மக்களின் உரிமையை உறுதி செய்தது. தொலைதொடர்பு நிறுவனங்கள் இழப்பை சந்தித்தால் அவர்கள் தங்கள் கருவிகளை தரம் உயர்த்தி, மேலும் தரமான சேவையை வழங்குவதன் மூலம் தங்கள் இழப்பை ஈடுகட்ட முடியும். எங்கள் ஓபரா மினியில் தொலை தொடர்பு நிறுவனங்களோடு கூட்டணி அமைத்து, விக்கிபீடியா, ஃபேஸ்புக் போன்ற தளங்களை இலவசமாக கிடைக்க செய்கிறோம்.

தொழில்நுட்பம் இந்தியாவின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவ முடியும்?

ஏற்கனவே இந்திய அரசு டிஜிட்டல் இண்டியா என்ற திட்டத்தின் மூலம் தொழில்நுட்பத்தை பரவலாக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த அரசில் எங்களை போன்ற இணைய நிறுவனங்களுக்கு மிக சாதகமான நிலையே உருவாகி இருக்கிறது. எங்களை பொறுத்தவரை நாட்டின் கடைகோடியில் வசிக்கும் மனிதருக்கும் இணையம் சென்று அடையவேண்டும். பயனாளர் எந்த வகையான அலைபேசி வைத்திருந்தாலும், அது சாதாரண போனாக இருந்தாலும் அல்லது ஸ்மார்ட் போனாக இருந்தாலும் அவருக்கு இணைய இணைப்பு தங்குதடையில்லாமல் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

அதனால்தான் ஆப்ரிக்காவில் ஐம்பது லட்சம் பயனாளர்களுக்கு இலவச மென் புத்தகங்களை (இ-புக்) ஓபரா மினி மூலம் இலவசமாக வழங்கி இருக்கிறோம். தனிப்பட்ட முறையில் மிகவும் மன நிறைவளித்த விஷயம் இது. இதைபோல இந்தியாவிலும் ஓபரா மினி மூலம் இணைய இணைப்பில் சில தளங்களை (விக்கிபீடியா, ஃபேஸ்புக்) இலவசமாக வழங்கி வருகிறோம்.

இந்திய பயண அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..?

இந்தியாவில் எங்கள் ஓபரா மினி அரை கோடி பயனர்களை அடைந்தபிறகு மிகப்பெரிய அளவில் கொண்டாடினோம். புதுடெல்லியில் நடந்த கொண்டாட்டங்களில் நாங்கள் பாலிவுட் நடனம் ஆடினோம் (சிரிப்பு). எப்போதும் எனக்கு இந்திய பயணம் மனநிறைவளிக்க கூடிய விஷயம். இந்தியாவில் உள்ள மக்களின் அன்பும் உபசரிப்பும் மறக்க முடியாதவை. சமூகத்தின் கீழ் நிலையில் இருப்பவர்களின் வீடுகளில் கூட விருந்தோம்பலில் குறையிருக்காது. உறைபனி சூழ் நாடான நார்வேயில் சூரியன் வரவில்லை என்றால் மக்கள் முகங்களில் மகிழ்ச்சி இருக்காது. அண்டை அயலாரிடம் கூட பேசமாட்டார்கள். ஆனால், உங்கள் ஊரில் அப்படி இல்லை. பேசாமல் விடமாட்டார்கள். இதுதான் உங்கள் நாட்டின் மிகப்பெரிய சிறப்பே!!

இந்திய உணவுகளில் என்ன வகையான உணவுகள் பிடிக்கும்?

நார்வே நாட்டில் தமிழக உணவு வகைகள், தமிழர்கள் நடத்தும் ஹோட்டல்களில் கிடைக்கும். இந்திய உணவு வகைகள் நிறையவே கிடைக்கும். பொதுவாக பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் இங்கே இந்திய உணவு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்கள். ஆனால், அவை மிக சுமாராகதான் இருக்கும். என் இந்திய பயணத்தில் விதவிதமான உணவு வகைகளை முயற்சி செய்வது உண்டு. இட்லி, தோசை பிடித்தமான உணவு. வட இந்திய உணவுகளும் பிடிக்கும். இந்திய இனிப்பு வகைகள் கிடைத்தால் விடமாட்டேன்.

இந்தியா போன்ற பல மொழி, பல இன சமூகம் வசிக்கும் நாட்டில் உங்கள் நிறுவனம் என்ன வகையான சவால்களை சந்திக்கிறது?

என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தும் ஒரு விஷயம் இது. ஐரோப்பா என்ற மிகப்பெரிய கண்டத்தில் பல இன மக்கள் தனித்தனி நாடுகளாக இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை மொழியாலும், கலாசாரத்தாலும் வேறுபாடாக இருந்தாலும், ஒரே தேசமாக ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இப்போது ஓபரா மினி பதிமூன்று இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுடன் இணைந்து ஓபரா மினி ஏதாவது செயல்பாடுகளை செய்கிறதா?  

தமிழக அரசு தரப்பில் இருந்து எங்களை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை. அழைத்தால் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்.

உலகெங்கும் பரவி வாழும் தமிழக மக்களுக்கு இந்த நேர்காணல் மூலமாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தமிழ் மக்களின் அன்பும் அரவணைப்பும் உலகம் அறிந்தது. தமிழர்களின் வீர விளையாட்டுகள், விருந்தோம்பல் பற்றியும் நாங்கள் அறிந்திருக்கிறோம். தொடர்ந்து தமிழ் மக்கள் இதே போல வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பது என் ஆசை. ஓபரா மினி மூலம் இணையத்தை பார்க்கவும் மறக்கவேண்டாம் (சிரிக்கிறார்).

– ஸ்வீடனில் இருந்து ரவி

Leave a Response