சீனாவில் வேகமாகப் பரவி வரும் ‘ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்'(எச்எம்பிவி) தற்போது இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் எச்எம்பிவி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், தொண்டை கரகரப்பு, காய்ச்சல், தோல் தடிமன் போன்ற அறிகுறிகள் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மக்கள் அச்ச உணர்வுடன் இருக்கின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு
சட்டப்பேரவையில் நேற்று எச்எம்பி கிருமித் தொற்று குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது….
எச்எம்பிவி தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. 2001 ஆம் ஆண்டிலும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. குளிர்காலம், இளவேனில் காலங்களில் இந்த வைரஸ் பரவக்கூடும். இந்த நோய்க்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்புகள். இந்த வைரஸ் பாதிப்பு குணமாக 3 முதல் 6 நாட்கள் வரை ஆகும்.
இணைநோய் உள்ளவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் ஓரளவு தீவிரத்தன்மை அடைந்து நுரையீரல் பாதிக்கப்படும். 2024 இல் 714 பேருக்கு பரிசோதனை செய்ததில் பலருக்கு இந்த நோய் பாதிப்பு இருந்தது. தமிழகத்தில் சென்னை, சேலத்தில் இருவர் நோயால் பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். சுவாசநோய் தொற்றுகள் தானாகவே குணமடையும் என்பதால்தான், மருத்துவ வல்லுநர்கள் இதற்காக சிறப்புச் சிகிச்சைகள் தேவை இல்லை என்கின்றனர். இந்த வைரஸுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசிகள் இல்லை. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக இருந்த சவுமியா சுவாமிநாதன், இனி வரும் காலங்களில் வைரஸ் தொற்றுகளுடன் வாழ வேண்டும் என தெரிவித்திருந்தார். அதைத் தான் நான் தெரிவித்தேன்.
இது வீரியம் மிக்க வைரஸ் அல்ல. இதற்கென பிரத்யேக மருந்துகளும் இல்லை. பிரத்யேக சிகிச்சைகளும் இல்லை. பரிசோதனைகள் செய்து கொள்ளும் அவசியமும் இல்லை. இதனால் நாம் பெரிய அளவில் பயப்பட தேவையில்லை. இதற்காக தனியாக பிரத்யேக படுக்கை வசதிகளும் தேவையில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.