அப்துல்மாலிக் புகார் – சிக்கலில் சவுக்கு சங்கர்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குடன் மலேசிய தொழிலதிபர் அப்துல் மாலிக்கை தொடர்புபடுத்தி செய்திகள் வந்தன.

மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர்,திரைப்படத் தயாரிப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு,ஆதரவற்ற மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்.

இவருடைய சமூக சேவையைப் பாராட்டி மலேசிய இராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சர்வ தேச அளவில் ‘மாஸ்டர் கிளாஸ் தொழில் முனைவோர்‘ என்ற விருதும் பெற்றுள்ளார்.

கடின உழைப்பு மூலம் இளம் வயதிலே பல சாதனைகளைத் தன் வசப்படுத்தியுள்ள அப்துல் மாலிக் பின் தஸ்திகீரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்குப் புறம்பாக சில காணொலிகள் வெளியிடப்பட்டன.

அவற்றில்,போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக் என்பவருக்கும் அப்துல் மாலிக்குக்கும் தொடர்பு உண்டு என்ற அவதூறு செய்தி வெளியானது.

இது உண்மைக்குப் புறம்பானது என்றும் இந்த அவதூறு செய்தி வெளியீட்ட ஆதன் தமிழ் மீடியா பிரைவேட் லிமிடெட்,மாதேஷ், வராகி, சவுக்கு சங்கர் உட்பட சில யு.டியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையாளரிடம் 18.03.2024 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்துல் மாலிக் பின் தஸ்திகீர் சார்பில் அவருடைய வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது….

திரு.அப்துல் மாலிக் மலேசியாவில் புகழ் பெற்ற தொழிலதிபர்.அவருடைய நிறுவனங்களில் ஒன்றான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சினிமா தொடர்புடைய பல வர்த்தகம் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழ்ப் படங்களை மலேசியாவில் விநியோகம் செய்து வருகிறார். இணை தயாரிப்பாளராகப் பல தமிழ்ப் படங்களையும் தயாரித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பல உதவிகளையும் தன்னலம் பார்க்காமல் செய்து வருகிறார். அவருடைய இந்தச் சேவைகளைப் பாராட்டி மலேசிய இராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது.
தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் பல நட்சத்திர கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மலேசியா செல்லும்போது சினிமா சார்ந்து பல ஆலோசனைகளையும், வழிநடத்துதலையும் திரு.அப்துல் மாலிக்கிடம் கேட்பதுண்டு.

இதன் காரணமாக திரு.அப்துல் மாலிக்கின் வளர்ச்சியைப் பிடிக்காத சில விசமிகள் சமூக வலைத்தளங்களில் அவருடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக தீய நோக்கத்துடன் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக ஆதன் மீடியாவைச் சேர்ந்த திரு.மாதேஷ், திரு.வராகி பாலாஜி மற்றும் திரு.சவுக்கு சங்கர் ஆகியோர் எந்தவித ஆதாரமும், ஆவணங்களும் இல்லாமல் திரு.அப்துல் மாலிக் அவர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்துவதோடு அதன் மூலம் மறைமுக ஆதயாம் தேட வேண்டும் என்ற நோக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

அதை அடிப்படையாகக் கொண்டு மேலும் பல யு-டியூப் சேனல்கள் செவி வழிச் செய்தியை உண்மை என்று நம்பி எந்தவித விசாரணை, முன் அனுமதியும் இல்லாமல் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

மேற்கண்ட வீடியோ பதிவுகள் திரு.அப்துல் மாலிக் அவர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்தியிருப்பதோடு, மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.அதைச் சட்டபூர்வமாக அணுகும்விதமாக பொய் வீடியோ வெளியிட்ட நிறுவனங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனுவும் அளித்துள்ளோம்.

அந்த புகாரில், அவதூறு வீடியோக்களை நீக்குவதோடு, பொதுவெளியில் திரு.அப்துல் மாலிக் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது, இந்திய மதிப்பில் ரூபாய் ஐந்து கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இவர்கள் சான்றுகளோடு புகார் கொடுத்துள்ளதால் சவுக்கு சங்கர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிக்கல் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response