கன்னியாகுமரியில் 105 செமீ மழை – இவ்வளவு அதிகமழைக்கு இதுதான் காரணம்

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது…..

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 18 ஆம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, 39 இடங்களில் அதி கனமழையும், 33 இடங்களில் மிகக் கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ., திருச்செந்தூரில் 69 செ.மீ., திருவைகுண்டத்தில் 62 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 61 செ.மீ., மாஞ்சோலையில் 55 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 53 செ.மீ., தென்காசி மாவட்டம் குண்டாறு அணையில் 51 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 50 செ.மீ., நாலுமுக்கு பகுதியில் 47 செ.மீ., பாளையங்கோட்டையில் 44 செ.மீ., அம்பாசமுத்திரத்தில் 43 செ.மீ., மணியாச்சியில் 42 செ.மீ., சேரன்மகாதேவி, கன்னடயன் அணைக்கட்டில் 41 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வழக்கமாக 42 செ.மீ.மழை பெய்யும். இந்த ஆண்டு இதுவரை 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 5 சதவீதம் அதிகமாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 105 செ.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 103 சதவீதம் அதிகம். திருநெல்வேலியில் 135 சதவீதம், தூத்துக்குடியில் 68 சதவீதம், தென்காசியில் 80 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. பாளையங்கோட்டையில் தற்போது 44 செ.மீ. பதிவாகியுள்ளது.

இதற்கு முன்பு அங்கு 1931 இல் 20 செ.மீ., 1963-ல் 29 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.வழக்கமாக வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியால் கனமழை பெய்ததில்லை. ஆனால் தற்போது பரவலாக அதி கனமழை பெய்துள்ளது. இவ்வளவு மழை இதுவரை பதிவானதில்லை. தற்போதுள்ள அறிவியல் முன்னேற்றத்துக்கு ஏற்ப, கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு துல்லியமாக வானிலையைக் கணித்து வருகிறோம்.

இன்று தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20 முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 200 ஆண்டுகளில் தென்மாவட்டங்களில் இதுபோன்ற மழைப்பொழிவைக் கண்டதில்லை. தொடர்ந்து 27 மணி நேரம் அதீத கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, தூத்துக்குடியில் காயல்பட்டினம், நெல்லையில் மூலக்கரைப்பட்டி, குமரியில் மைலாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

இதுபற்றி வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், ‘நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து நீராவிக் காற்றை குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி ஈர்த்ததால் மழை கொட்டித்தீர்த்தது. கடல் பகுதியில் தொடர்ந்து 30 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு அதிகமாக வெப்பம் இருக்கும் போது அங்கு நீராவி உருவாகும் நிலை ஏற்படும். அப்போது தென் துருவத்தில் இருந்து வருகின்ற காற்று நீராவியுடன் சேர்ந்து வெப்பக் காற்றாக மாறி பிறகு வெப்ப நீராவியாக மாறி வரும்போது அதைக் குளிர்விக்கும் வகையில் ஈரக் காற்று இணையும் போது அது மழையாக மாறும். அப்படிப்பட்ட காற்றை வங்கக் கடலில் உள்ள காற்று சுழற்சியானது ஈர்த்துவிட்டால் அதனால் மழை பொழிவு அதிகரிக்கும்.இந்த நிகழ்வுதான் நேற்று தென் மாவட்டங்களில் நடந்தது.

இதற்கு ஆதாரமாக கிழக்குப் பகுதியில் இருந்து நீராவிக் காற்று குமரிக் கடல் பகுதிக்கு தொடர்ந்து வந்துகொண்டேஇருந்ததால் அங்கு மழை அளவுக்கு அதிகமாக கொட்டித் தீர்த்துள்ளது. இந்தநிகழ்வு 48 மணி நேரம் நீடித்து நிலைத்து இருந்தது. இந்தக் காற்று சுழற்சியின் உயரம் 5800 மீட்டர்(5.8 கிமீ) இருந்தது. இதன் வேகம் 30 கிமீ வேகம் முதல் 40 கிமீ வேகம்தான் இருந்தது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து வந்த நீராவிக் காற்றையும் 40 கிமீ வேகத்தில் கொண்டு வந்தது. வடகிழக்குப் பகுதியில் இருந்து வருகின்ற காற்றும் இந்தநீராவிக் காற்றும் மோதியதால் பலத்தமழை பெய்தது. இதனால் காயல்பட்டினத்தில் 95 செ.மீ பெய்துள்ளது. மழை பொழிவு மேலும் தொடரும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.

Leave a Response