சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திருமாவளவன் போட்டி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் நவம்பர் 8 அன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

சிதம்பரத்தில், அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர் சந்திப்பின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்கள் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் அரங்கத் தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் பாலாஅறவாழி மற்றும் செல்லப்பன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அப்போது அவர் கூறியதாவது…..

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி நிரவல் காரணமாக பேராசிரியர்கள், ஊழியர்கள் தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய எஸ்சி, எஸ்டி பணியாளர்கள் இதனால் மிகவும் குறைக்கப்பட்டு தற்போது 5 சதவீதம் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இதனால் எஸ்சி எஸ்டி அல்லாதவர்கள் பணியாற்றும் பல்கலைக்கழகமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது சமூக நீதி கருத்தியலுக்கு எதிராக அமையும். இட ஒதுக்கீட்டின்படி இந்த பல்கலைக்கழகத்தில் எஸ் டி, எஸ் டி பணியாளர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 17 ஆம் தேதி சிதம்பரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் கலந்து கொள்கிறார். அதேபோல் தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி காலிப்பணியிடங்களை அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணாமலை நடைபயணத்தில் அதிமுக, பாமகவினர் பெரும்பாலும் கலந்து கொள்கிறார்கள். இதில் பாஜகவினர் சொற்ப அளவிலே உள்ளனர் இப்படியே போனால் அதிமுகவையும் பாமகவையும் பாஜக விழுங்கிவிடும். இதற்கு நாட்டில் பல உதாரணங்கள் உள்ளன. பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்து மதத்தை எதிர்க்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மின் மீட்டரை பொருத்தத் தடை விதிக்க வேண்டும். இதனால் ஏழை எளிய மக்கள், நெசவாளர்கள், விவசாயிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இலவச மின்சாரம் கிடைக்காது. எனவே தமிழக அரசு ஸ்மார்ட் மின்மீட்டரை வைக்க அனுமதிக்கக் கூடாது.

மோடி ஏழை மக்களை ஏமாளி என நினைத்துக் கொண்டு நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கூறி வருகிறார். இது முற்றிலும் தவறானது. ஏழை மக்கள் வரும் நாடாளுமன்றத்தில் இதற்குப் பதில் அளிப்பார்கள். சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .இதனை தமிழக அரசு அனுமதிக்காமல் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடவிருக்கிறேன். இந்தத் தேர்தலில் கட்சிக்குக் கூடுதல் இடங்கள் கேட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response