என் கேள்விக்கு என்ன பதில்? – அமித்ஷாவை அலறவிடும் மு.க.ஸ்டாலின்

கடந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பாஜக செய்த திட்டங்கள் என்னென்ன? என்று எழுப்பிய கேள்விக்கு அமித்ஷா பதில் சொல்லாமல் சென்றது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.

சேலம் மேட்டூரில் நேற்று காலை டெல்டா பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்து விட்டபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது….

அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக பெயர் வைக்கிறது என்ற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு தொடர்ந்து நாங்கள் விளக்கம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இதுபோல் நடந்து கொள்வது அதிமுகவின் கலை. திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாகக் கட்டினோம். ஆனால் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா அவரது பெயரை வைத்துக்கொண்டு அதைத் திறந்து வைத்தார். நாங்கள் அதற்குக் கவலைப்படவில்லை.

அதே போல் திமுக ஆட்சியில்தான், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்தை புதிதாகக் கட்டினோம். அதை ஆட்சிக்கு வந்த அதிமுக, அரசு மருத்துவமனையாக மாற்றி அரசியல் செய்தது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள்தான் தொடங்கி வைத்தோம். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நான் துணை முதலமைச்சராக இருந்தேன். நானே ஜப்பான் நாட்டிற்குச் சென்று அங்கே நிதி உதவியைப் பெற்று அதன் மூலம் ஒன்றிய அரசின் உதவியைப் பெற்று அத்திட்டத்தைத் தொடங்கி வைத்தோம். அன்றைக்கு அதை ஜெயலலிதா எதிர்த்தார். மெட்ரோ தேவையில்லை என்று வெளிப்படையாகவே சொன்னார். பின்னர் அதன் திறப்புவிழாவில் தனது பெயரைப் பொறித்துக்கொண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

அதேபோல் கோட்டூர்புரத்தில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான் கட்டித் திறந்து வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதைப் பாழ்படுத்தி சீரழித்தது. அதற்குப் பிறகு நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடி, போராடி அதை நிலைநாட்டினோம். இதுபோன்ற பட்டியல் நீளமானது. இந்த வரலாறுகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். அதேபோல் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா உணவகத்தை மூடிவிடுவோம் என்று திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்தனர். ஆனால் நாங்கள் மூடவில்லை. இப்போதுவரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

பள்ளிமாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப்பையில் ஜெயலலிதா படமும், முதலமைச்சராக இருந்த பழனிசாமி படமும் போட்டுக் கொடுத்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த நேரத்தில் அதில் சிறிது மீதி இருந்தது. அப்போது அரசு அதிகாரிகள், இதை மாற்றிவிடலாம் என்று என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் யார் படமும் போடவேண்டாம், இருப்பது அப்படியே இருக்கட்டும். இதை மாற்றினால் பல கோடி ரூபாய் இழப்பு வரும், அந்த இழப்பை அரசு ஏற்றுக் கொள்ளாது என்று சொன்னேன். எனவே இதையெல்லாம், இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

2 முறை தமிழர் ஒருவர் பிரதமர் ஆவதை திமுக தான் தடுத்தது என்று அமித்ஷா சொல்லியுள்ளார். அவர்கள் யார்? என்பதை வெளிப்படையாக அவர் சொன்னால் அதற்குரிய விளக்கத்தை நம்மால் அளிக்கமுடியும். எனவே அதற்கு விளக்கமாக இப்போது பதில் சொல்ல முடியாது. ஆனாலும் தமிழரை பிரதமராக ஆக்கப் போகிறேன் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருக்கிறது. மோடி மேல் அவருக்கு என்ன கோபம்? என்று தெரியவில்லை. 2024 இல் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை இருக்கிறார், முருகன் இருக்கிறார். அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு மும்முரமாக இருந்தால், அதை எதிர்ப்பதில் நாங்களும் மும்முரமாக இருக்கிறோம். கடந்த 50 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள சரபங்கா திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை பாஜக அரசு கொடுத்திருப்பதாக அமித்ஷா ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார். சேலத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில், பாஜக ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் எந்த சிறப்புத் திட்டமும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

ஆனால் காங்கிரசுக் கூட்டணியில் திமுக இருந்த நேரத்தில், மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியில் என்னென்ன சிறப்புத் திட்டங்கள் வந்தன என்பதைப் பட்டியல் போட்டுக் காண்பித்துள்ளேன். அவர் அதைப் படிக்கவில்லையா? இல்லை அதைப் படித்து அதை யாரும் எடுத்துச் சொல்லவில்லையா? என்பதுதான் எனது சந்தேகம். பாஜக 9 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறது என்று கேள்வி கேட்டேன். அந்தக் கேள்விக்கு எந்தப் பதிலும் இல்லை.

எந்தத் திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டிருப்பதைப் பற்றி நான் கேட்கவில்லை.

இன்றைக்கு ஜிஎஸ்டி.,யில் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிய அரசிற்கு நிதி கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜிஎஸ்டி.,யில் தமிழ்நாட்டிலிருந்து அதிகமாகக் கொடுத்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிற்கு, ஒன்றிய அரசு மிகவும் குறைவாக நிதியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது,

அதேபோல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மதுரையில் ரூ.1200 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அப்போது நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் உறுதிஅளித்தார். பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அதற்குப் பிறகு பலமுறை அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். அப்படி வந்தபோது, 50 சதவீதம் பணி முடிந்துவிட்டது, 75 சதவீதம் பணி முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் இதுவரைக்கும் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. நான் கேட்ட கேள்வி எதற்கும் பதில் தரவில்லை.

ஐமு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, எய்ம்ஸ் என்று ஒரு மருத்துவமனை தேவைப்படவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவக் கட்டமைப்புகள் அதிக அளவில் சிறப்பாக இருந்தன. ஆனால் இந்தத் திட்டத்தை திமுக அறிவிக்கவில்லை. ஒன்றிய அரசு தான் அறிவித்தது. அவர்கள் தான் இதைச் செய்ய வேண்டும். இந்தக் கேள்வியைக் கேட்பதே ஒரு பொறுப்புள்ள உள்துறை அமைச்சருக்கு அழகல்ல.

டாஸ்மாக்கில் பத்து ரூபாய் ஊழல் என்பது திட்டமிட்டு செய்யக்கூடிய பொய் பிரசாரம். திமுக, காங்கிரசுக் கூட்டணி ஆட்சியில் ஊழல் பெரிய அளவில் நடந்தது என்று சொல்பவர்கள் ரபேல் ஊழல், அதானி ஊழல்களால் இன்றைக்கு இந்தியாவே தலைகுனிந்து நிற்கிறது என்பதை உணரவேண்டும். முதலில் அதற்கு பதில் சொல்லட்டும். அதற்குப் பின்பு இதைப் பேசுவோம்.

அத்திக்கடவு – அவினாசி திட்டம் முடியும் நிலையில் இருக்கிறது. விரைவில் இது திறக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Response