தமிழர்கள் விசயத்தில் அலட்சியம் – ஒன்றிய அரசுக்கு முத்தரசன் கண்டனம்

சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சூழலில் ஒன்றிய அரசு மீனவர்களை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டி வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது……

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வந்த போது அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மீன்பிடி கருவிகள், பேட்டரிகள், ஜிபி எஸ் கருவிகளையும் இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இலங்கை கடற்படையினர் சர்வதேச விதிமுறைகளையும், மரபுகளையும் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வரும், ஒன்றிய அரசும் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இருப்பினும், ஒன்றிய அரசு தமிழ்நாடு மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும், வாழ்வுரிமைக்கும் பாதுகாப்பு வழங்குவதில் போதிய அக்கறை காட்டாமல், அலட்சியப்படுத்தி வருவதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், ஒன்றிய அரசின் அயலுறவுத்துறை தமிழக மீனவர்கள் உயிரையும், உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் அறிக்கை விடுத்துள்ளார்.

Leave a Response