சீனா மற்றும் பாகிஸ்தானால் இந்தியாவுக்கு ஆபத்து – இராகுல்காந்தி எச்சரிக்கை

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசிய நிகழ்வை இராகுல் காந்தி தனது யூடியூப் சேனலில் நேற்று வெளியிட்டுள்ளார்.

அதில்…

இந்தியா இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. நம் இராணுவத்தின் மீது எனக்கு மரியாதை மட்டும் இல்லை, மிகுந்த அன்பும் பாசமும் உண்டு. நீங்கள் இந்தத் தேசத்தைப் பாதுகாக்கிறீர்கள். நீங்கள் இல்லாமல் இந்தத் தேசம் இல்லை. முன்பு, நமக்கு 2 எதிரிகள் இருந்தனர். ஒன்று, சீனா, இன்னொன்று பாகிஸ்தான். அந்த எதிரிகளைத் தனித்தனியாக வைத்திருப்பது நமது கொள்கையாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது. சீனாவும், பாகிஸ்தானும் இராணுவ ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் ஒன்றாகச் செயல்படுகின்றன.

இரு நாடுகளும் போருக்குத் தயாராகி வருகின்றன. ஒருவேளை இந்தியாவுக்கு எதிராகப் போர் நடந்தால், அதில் சீனாவும், பாகிஸ்தானும் தனித்தனியாக இல்லாமல், சேர்ந்து நம்மைத் தாக்கும். அதனால்தான் ஒன்றிய அரசு அமைதியாக இருக்க முடியாது என மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன். கடந்த 9 ஆம் தேதி அருணாச்சலப் பிரதேச எல்லையில் என்ன நடந்தது? என்பதை ஒன்றிய அரசு முழுமையாகச் சொல்ல வேண்டும்.

உண்மையிலேயே இந்த விசயத்தில் நாம் 5 ஆண்டுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அதை ஒன்றிய பாஜக அரசு செய்யத் தவறி விட்டது. நாம் வேகமாகச் செயல்படாவிட்டால், பெரிய இழப்பு ஏற்படும். அருணாச்சல் மற்றும் லடாக் எல்லையில் என்ன நடக்கிறது? என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்.

இவ்வாறு இராகுல் காந்தி பேசியுள்ளார்.

Leave a Response