
2023 ஆம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி, நாடாளுமன்றம்,சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.மகளிர் இடஒதுக்கீடுச் சட்டத்தை
அமல்படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை 850 ஆக அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டது.
இதற்காக,அவசரகதியில் நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளில் மகளிர் இடஒதுக்கீடுச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசனத் திருத்தம் (131 ஆவது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த 3 மசோதாக்களுக்கும் காங்கிரசு, சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மசோதா மீதான விவாதம் நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது.இந்நிலையில், மக்களவையில் நேற்று காலை விவாதம் தொடர்ந்தது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசினர்.கனிமொழி,ஆ.இராசா (திமுக),சசிதரூர், ஜோதிமணி (காங்கிரசு), மிதுன் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரசு), ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐஜத), கல்யாண் பானர்ஜி (திரிணமூல் காங்கிரசு), ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு (தெலுங்கு தேசம்), டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி), ஹர்சிம்ரத் கவுர் பாதல் (சிரோமணி அகாலி தளம்), ஹேமமாலினி (பாஜக) உள்ளிட்ட உறுப்பினர்கள் மசோதாவுக்கு
ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பதில் அளித்தனர்.
இந்த விவாதத்தில் இராகுல் காந்தி பேசியதாவது…
இந்தச்சபையில் இன்று சில உண்மைகள் உரக்கச் சொல்லப்பட வேண்டும்.தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மசோதா பெண்களுக்கானது அல்ல.இது பெண்களை முன்னிறுத்தி,நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றி
அமைக்கும் ஒரு தந்திரமே தவிர வேறொன்றுமில்லை.
2023 ஆம் ஆண்டு இதே சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கும்,இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள 131 ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது.2023 மசோதாவை இன்னும் 10
ஆண்டுகளில் அமல்படுத்துவோம் என்று பாஜகவினர் கூறினர்.ஆனால், தற்போதைய மசோதா முற்றிலும்
மாறுபட்டது.
உண்மையிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்தால்,பழைய
மசோதாவை உடனடியாகக் கொண்டு வாருங்கள்.அதனை இப்போதே அமல்படுத்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளிப்போம்.அதைவிடுத்து,பெண்களின் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வது வெட்கக்கேடானது.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை,சாதி வாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கும் ஒரு முயற்சியாகும். எனது ஓபிசி சகோதர,சகோதரிகளுக்கு அதிகாரத்தை வழங்குவதற்குப் பதிலாக,அவர்களிடமிருந்து அதைப் பறிக்கும் முயற்சியே இது.
இவ்வாறு இராகுல் பேசினார்.
இதற்கிடையே, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வேண்டுகோள் விடுத்தார். ‘மகளிர் இடஒதுக்கீடு விசயத்தில் கடந்த 40 ஆண்டுகளாக அரசியல் செய்யப்பட்டு வந்தது. சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆனபிறகும், முடிவு எடுக்கும் விசயத்தில் மகளிருக்கு குறைந்தபட்ச பிரதிநிதித்துவம்கூட தரப்படவில்லை.
இது சரியான நடவடிக்கை அல்ல. நாட்டின் மக்கள்தொகையில் பாதியளவு இருக்கும் மகளிர் தங்களது
உரிமைகளைப் பெறவேண்டிய நேரம் வந்துள்ளது.இந்த மசோதா குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு,
சரியான பதில்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
உங்களது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகியோரை நினைத்துப் பார்த்து,மகளிர் இடஒதுக்கீடு மசோதா
விசயத்தில் மனசாட்சிப்படி முடிவு எடுக்கவேண்டும்.மகளிருக்கு அதிகாரம் அளிக்க நமக்கு சிறந்த வாய்ப்பு
கிடைத்துள்ளது.எனவே,அவர்களுக்கான புதியவாய்ப்புகளை பறிக்காதீர்கள்.தயவுசெய்து உரிய பரிசீலனை செய்து, முழுஉணர்வுடன் முடிவு எடுத்து,மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுகொண்டிருந்தார்.
மக்களவையில் மசோதா குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது…..
தமிழ்நாட்டுக்கு தற்போது 39 எம்.பி. தொகுதிகள் உள்ள நிலையில் தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் இந்த
எண்ணிக்கை 59 ஆக உயரும். இதேபோல, எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கை கேரளாவில் 20 இல் இருந்து 30 ஆகவும், ஆந்திராவில் 25 இல் இருந்து 38 ஆகவும், கர்நாடகாவில் 28 இல் இருந்து 42 ஆகவும் உயரும். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாது. மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 இல் இருந்து 7.23 விழுக்காடாக அதிகரிக்கும்.
தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும். 2029 க்கு முன்புவரை தற்போது இருக்கும் இடங்களின்
எண்ணிக்கையிலேயே அனைத்து தேர்தல்களும் நடைபெறும் என அமித்ஷா பேசினார்.
அவர் பேசி முடித்ததும், மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 528 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற மூன்றில் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்களவையில் 352 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மசோதாவை நிறைவேற்ற முடியும்.
ஆனால் 298 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்ததால் மசோதா தோல்வி அடைந்தது. நேற்றைய வாக்கெடுப்பின்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா மட்டுமே வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மற்ற 2 மசோதாக்கள் மீதும்
வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது….
தேர்தலுக்கு முன்பே மண்ணைக் கவ்விய என்டிஏ. தொகுதி மறுவரையறை கறுப்புச் சட்டத்தை எதிர்த்துக் கருஞ்சட்டையோடு ஆண்டிப்பட்டியில் மேடையேறினேன்.
வெற்றிச் செய்தி வந்ததும், மீண்டும் வெள்ளுடைக்கு மாறி, வெடியைப் போட்டுவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரிக்க மேடையேறினேன். தேனியும், திண்டுக்கல்லும் வழங்கும் திடமான வெற்றியோடு, மே-4 ஏழாவது முறையாகக் கழகம் மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏறும் என்று தெரிவித்துள்ளார்.


