கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி தமிழகத்தில் கால் பதித்தது.இதையடுத்து தொடர்ந்து அதிகரித்த தொற்று 3 அலைகளாகப் பரவியது.

முதல் அலையில் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிகபட்சமாக 6,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி ஒரே நாளில் கொரோனாவுக்கு 127 பேர் பலியாகினர்.
இதையடுத்து 2 ஆவது அலையில் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து எழுந்த 3 ஆவது அலையில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்றது.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதையடுத்து இணை நோய் உள்ளவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

முதலில் மந்தமாக இருந்த தடுப்பூசி போடும் பணி 2 ஆவது அலைக்குப் பின்னர் சூடுபிடிக்கத் தொடங்கியது. தொடர்ந்து முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு உரிய நாட்களுக்குப் பின்னர் 2 ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 92 விழுக்காடு பேர் முதல் தவணையும், 75 விழுக்காடு பேர் 2 ஆவது தவணையும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 50-க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. சில மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ள அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அனைத்து மாவட்ட துணை பொது சுகாதார இயக்குநர்களும், பெருநகர சென்னை மாநகராட்சியின் மாநகர நல அதிகாரியும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் உள்ளிட்டவைகளைத் தொடர்ந்து கடைபிடிக்க ஊக்குவிக்க வேண்டும்.
இதைப்போல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் முதல், 2 ஆவது தவணை மற்றும் பூஸ்டர் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி போடத் தகுதியானவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response