தேவாரம் பாடச்சென்றவர்கள் குண்டுக்கட்டாகக் கைது – சிதம்பரத்தில் பரபரப்பு

சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபடும் அறவழிப்போராட்டம் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் என்று தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிவித்திருந்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பலம்(கனகசபை) கருவறை அல்ல, பூசை செய்யப்படும் இடம் அல்ல. பக்தர்கள் சிற்றம்பல மேடையில் இருந்து நடராசரைத் தரிசிப்பதற்கும், தேவாரம்-திருவாசக மந்திரங்களை ஓதுவதற்கும், பாடுவதற்கும் உரிய இடம் அது.

அண்மையில் சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த ஜெயஷீலா என்ற லட்சுமி என்பவர் சிற்றம்பல மேடை ஏறி வழிபட சென்றபோது தீட்சிதர்கள் அவரைத் தடுத்து, வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர். எனவே சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் பாடச் செல்வோம் என்ற கோரிக்கையுடன் அறவழியில் நடைபெற உள்ள போராட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி நேற்று தெய்வத் தமிழ் பேரவை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் 76 பேர் சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதியின் வழியாக கோவிலுக்குள் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த சிதம்பரம் உதவிகாவல்கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் கீழ சன்னதியில் தடுப்புக் கட்டைகள் அமைத்து அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால் தெய்வத்தமிழ் பேரவையினர் கீழவீதி தேரடி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இராசயோக சித்தர் பீடத்தின் வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார் தேவாரம் மற்றும் நிர்வாகிகள் திருவாசகத்தைப் பாடி, கண்டன முழக்கமிட்டனர்.

காவல்துறையினர் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி வாகனத்தில் ஏற்றினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 76 பேரை கைது செய்து, வ.உ.சி. தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

போராட்டம் குறித்து கி.வெங்கட்ராமன் கூறியதாவது,

சிற்றம்பல மேடையில் ஏறி, நடராசரை வழிபடச் சென்ற பெண்ணைத் தாக்கிய தீட்சிதர்களைக் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்.

விலங்குகளைக் கூண்டில் அடைத்துப் பிடிப்பதைப் போல் தேவாரம் பாடும் ஆன்மிக பக்தர்களை கூண்டில் அடைத்து வைக்கிறார்கள். நாங்கள் சிதம்பரம் நடராசர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகம், பாடிய பிறகுதான் ஓய்வோம். இந்தப் போராட்டம் வருகிற 5 ஆம் தேதி வரை நடைபெறும்.

தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மறுஆய்வு செய்து அனுமதி வழங்கவும், சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று கூறும் தீட்சிதர்களைக் கைது செய்ய வேண்டும். நடராசர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response