பிணை கிடைத்தாலும் வெளியில் வரமுடியாது – அடுத்தடுத்த சிக்கலில் மாட்டும் ஜெயக்குமார்

தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரைத் தாக்கி அரைநிர்வாணப்படுத்தி கைகளைக் கட்டி இழுத்து வந்தது தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். முதலில் பூந்தமல்லி கிளைச்சிறைக்கு அனுப்பப்பட்ட ஜெயக்குமார் பின்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து பிணை கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜெயக்குமாரின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கைதாகி சில நாட்களே ஆனதாலும், விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாலும் பிணை வழங்க முடியாது என நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். 8 கிரவுண்டில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை மிரட்டி அபகரித்துக் கொண்டதாக மகேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல், குற்றச்சதி, அத்துமீறி நுழைதல், குற்றத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் திமுக பிரமுகரைத் தாக்கிய வழக்கில் பிணை கிடைத்தாலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால் இன்னும் சில நாட்களுக்கு அவர் சிறையில்தான் இருந்தாகவேண்டும்.

இன்னும் சில புகார்கள் அவர் மீது இருப்பதால் மேலும் சில வழக்குகள் பாயலாம் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் நாட்கள் வாரங்களாகும் என்று சொல்கிறார்கள்.

Leave a Response