பாஜகவின் சின்னவீடு அதிமுக – ஈவிகேஎஸ் பேச்சால் பரபரப்பு

ஈரோட்டில் தமிழக காங்கிரசுக் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது….

கோடநாட்டில் நடந்த கொலை, கொள்ளையில் எடப்பாடி பழனிச்சாமியின் பங்கு பெரும் பங்கு என்பது விசாரணைக்குப் பிறகு முழுமையாக வெளிவரும். நீதிமன்றத்தில் தண்டிக்கப்படுபவர்களில் முதன்மையானவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கப்போகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும்போதே அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டினைச் சொல்லியுள்ளேன். அநேகமாக தேர்தலில் பரப்புரையாற்றுகின்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு இதுதான் கடைசி பரப்புரையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சி இன்றைக்கு அதிமுக கூட்டணியில் இல்லை என்று சொன்னாலும்கூட அதிமுக முழுக்க முழுக்க பாஜகவின் அடிமையாக, சின்ன வீடாக இருப்பதை யாரும் மறுத்து விட முடியாது.

சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதியைப் பற்றியே பேசுகின்ற தார்மீக உரிமையை அதிமுக இழந்து விட்டது. அதிமுகவினர் இன்றைக்குப் பெரியாரையும், அண்ணாவையும், எம்ஜிஆரையும் மறந்து விட்டார்கள். இன்னும் சில நாட்களில் ஜெயலலிதாவையும் மறந்து விடுவார்கள். கடைசியில் தமிழக மக்கள் முழுமையாக அதிமுகவை மறந்து விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response