இது நாடா சுடுகாடா? – சீமான் சீற்றம்

நாகாலாந்தில் பழங்குடி மக்கள் 13 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்களில் 13 பேர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி தருகிறது.

நாடு முழுவதும் பெரும் கொதிநிலையையும் கடும் எதிர்ப்பையும் உருவாக்கி இருக்கும் இச்சம்பவத்தின் மூலம் நாட்டு மக்களின் பாதுகாப்பும் மக்களாட்சித் தத்துவமும் முழுமையாக கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
இது மக்களுக்கான நாடா? மக்களைக் கொன்றொழிக்கும் சுடுகாடா? என உள்ளச் சீற்றம் ஏற்படுகிறது. பழங்குடியினரைப் படுகொலை செய்துவிட்டு, பயங்கரவாதிகள் என நினைத்துத் தவறுதலாகச் சுட்டுக் கொன்றுவிட்டோம் எனக் காரணம் கற்பிக்க முயலும் இந்திய ராணுவத்தினரின் செயல்பாடு மிக இழிவானது.

அந்நிய ஆக்கிரமிப்புகளில் இருந்தும், தாக்குதல்களில் இருந்தும் இன்னபிற சிக்கல்களில் இருந்தும் இயற்கைச் சீற்றங்களில் இருந்தும் சொந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டது ராணுவம். ஆனால் இம்மண்ணின் மக்களையே, போற்றிக் கொண்டாட வேண்டிய ஆதி தொல்குடிகளையே காக்கை குருவியைப் போல சுட்டுக் கொலை செய்தது கடும் கண்டனத்துக்குரியது.

எதன் பொருட்டும் எத்தகையக் காரணத்தினாலும் இதுபோன்ற பச்சைப் படுகொலைகளை அரசப் பயங்கரவாத செயல்களை ஒருநாளும் ஏற்க முடியாது. சொந்த நாட்டு மக்கள் மீதே ராணுவத்தினரால் ஏவப்பட்ட இத்தகைய அரச வன்முறையை பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாக எதிர்க்கிறேன்.

இக்கோரச் சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. இத்தகைய கொடுஞ் சூழலிலும் இது குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலோ, கொலை செய்த ராணுவ வீரர்களுக்குக் கண்டனமோ பதிவு செய்யாது பிரதமர் மோடி அமைதி காப்பது வெட்கக் கேடானது. பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கையும் அதிகாரத் திமிரில் செய்யும் அநீதிகளையும் அட்டூழியங்களையும் நாட்டு மக்கள் நீண்டகாலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இவற்றுக்கான எதிர்வினையை, பதிலடியைக் கட்டாயம் சனநாயக முறையிலேயே திருப்பித் தருவார்கள் என அறுதியிட்டுக் கூறுகிறேன்.

ஆகவே, நாடு முழுக்க எழுந்திருக்கும் எதிர்ப்பலையையும் மக்களின் உணர்வுகளையும் இனிமேலாவது புரிந்து கொண்டு பழங்குடி மக்களைக் கொன்றொழித்த ராணுவ வீரர்களைக் கொலை வழக்கின் கீழ் கைது செய்து உடனடியாக சிறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட பழங்குடி மக்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அம்மண்ணை ஆக்கிரமித்திருக்கும் ராணுவத்தினரை உடனடியாக திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என மத்திய அரசையும் நாகாலாந்து மாநில அரசையும் வலியுறுத்துகிறேன் என இவ்வறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

Leave a Response