மு.க.ஸ்டாலின் அறிவிப்பால் பாமகவுக்கு அரசியல் நெருக்கடி

தமிழ்நாட்டில் 1987 ஆம் ஆண்டு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி வன்னியர் சமூகத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினர் அடக்குமுறையைக் கையாண்டனர்.

அந்தப் போராட்டத்தின்போது, பாப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பாப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பேர் கொல்லப்பட்டனர்.

இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பலியானோர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம், அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை உள்ளிட்டவை வழங்கப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சமூகநீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில், 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில், அன்றைய அரசின் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்கள் 21 பேர்.

அத்தகைய தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, 1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையிலே, ரூபாய் 4 கோடி மதிப்பீட்டிலே, விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதேபோல், வீரமரணம் அடைந்த 21 சமூகநீதிப் போராளிகளின் குடும்பத்தாருக்கு அரசு சார்ந்த நிறுவனங்களில், கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். அதுமட்டுமல்லாது, கழக ஆட்சிக் காலத்திலே, 21 தியாகிகளின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, அவர்களது குடும்பத்தினருக்கு பென்சன் தொகையாக மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் இத்தகைய அறிவிப்பைக் கொண்டாடும் விதமாக விழுப்புரம் மாவட்ட தி.மு.கவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளீயிட்டுள்ளார்.

அதில்….

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1987&ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 21 மாவீரர்களுக்கு ரூ.4 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும், அவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதிக்கேற்ப அரசு வேலைவாய்ப்பு வழங்கப் படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இந்தியா சந்தித்த மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டம் என்றால் அது வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி எனது தலைமையில் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் தான். ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து முன்னேறுவதற்காக உரிமை கேட்டுப் போராடிய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, கொடூரமானத் தாக்குதல் உள்ளிட்ட பல வழிகளில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இந்தத் தாக்குதலில் சமூக நீதிப் போராட்டத்தில் ஈடுபட்ட 21 மாவீரர்கள் கொல்லப்பட்டனர்.

பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 சமூகநீதிப் போராட்டக்காரர்களும் துப்பாக்கியால் சுட்டும், அடித்தும் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம் எனது தலைமையில் வன்னிய மக்கள் நடத்திய போராட்டத்தை சமூகநீதிப் போராட்டமாக தமிழக அரசு அங்கீகரித்திருக்கிறது. அத்தகைய சமூகநீதிப் போராட்டத்திலிருந்து உருவானது தான் பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பமும், நோக்கமும் ஆகும். அந்த இலக்கை அடைவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதிப் பயணம் தடையின்றி தொடரும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாமக என்கிற கட்சி உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 37 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கீகாரம் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இதன்மூலம் வடமாவட்டங்களில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் வன்னியர் சமூகத்தின் வரவேற்பைப் பெற்றுவிட்டார் மு.க.ஸ்டாலின்.

இது பாமகவுக்குப் பின்னடைவு என்று சொல்லப்படுகிறது. அக்கட்சி கடந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்தது. இனிவரும் தேர்தல்களில் அக்கட்சிக்கு திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கமுடியாது என்றும் அவ்வாறு எதிர்நிலை எடுத்தால் அக்கட்சியை வன்னிய சமூக மக்களே புறக்கணிப்பார்கள் என்றும் சொல்கின்றனர்.

Leave a Response