தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதில் தமிழகம், கேரளம், புதுச்சேரியில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுவதாகவும் அசாமில் 3 கட்டங்களாகவும் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுவதாகக் கூறினார்.
இதையடுத்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு மரியாதை கொடுக்கிறோம்.மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் இத்தனை கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையமே மக்களுக்கு நீதி வழங்கவில்லை என்றால் மக்கள் எங்கே செல்வார்கள்? பாஜகவின் விருப்பம் போல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தைத் தனது சொந்த மாநிலமாக நினைக்க வேண்டும் பாஜக கண்ணோட்டத்தில் இருந்து மேற்கு வங்கத் தேர்தலைப் பார்க்கக் கூடாது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் மாநிலத் தேர்தலுக்காக அவர்களுடைய பதவியை தவறாகப் பயன்படுத்தக் கூடாது.
அவர்கள் பகுதி 1 பகுதி 2 இல் மாவட்டங்களைப் பிரித்துள்ளனர். நாங்கள் தெற்கு 24 பர்கானாவில் சக்திவாய்ந்தவர்கள் என்பதால் இங்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.
பா.ஜ.க மக்களை மதத்தால் பிளவுபடுத்த முயற்சிக்கிறது.மாநிலத் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்துவதற்காக மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது.
அவர்களின் எல்லா விளையாட்டுகளும் எங்களுக்குத் தெரியும். மத்திய அரசு தனது அதிகாரத்தை மாநிலத் தேர்தலில் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.
நாங்கள் சாதாரண மக்கள். எனினும் தொடர்ச்சியாகப் போராடுவோம். தேர்தலில் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதைத் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். தேர்தலையொட்டி பாஜக தங்களது நிறுவனங்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்து வருகிறது.
இவ்வாறு அவர் அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தும் போது, மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேள்வி எழுப்பியுள்ளது.
8 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னணியில் ஏதேனும் தவறான திட்டங்கள் உள்ளதா? என காங்கிரசுக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தின் மூன்று முக்கிய கட்சிகளுமே 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்துவதை எதிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.