இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை பேரிடராகக் கருத வேண்டும். இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவைப்படும் நிதியை மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 85 பேர் கரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றுக்கு விடுமுறை வழங்கி கர்நாடகா, மத்தியப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை உலக சுகாதார அமைப்பு பெருந்தொற்று நோயாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்று நோயை, பேரிடராகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் மாநிலப் பேரிடர் தடுப்பு நிதியிலிருந்து நிதியை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் உயிரிழந்தவர்கள் எனப்படும்போது, மீட்புப் பணியில் ஈடுபடுவோர், மருத்துவப் பணியில் ஈடுபடுவோர் ஆகியோரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தாலும் அவர்களுக்கும் ரூ.4 இலட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.