நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக 2017 ஆம் ஆண்டு கடைசியில் அறிவித்தார். அதிலிருந்து அவ்வப்போது அவர் இப்போது கட்சி தொடங்கப் போகிரார், அப்போது தொடங்கப் போகிறார் என்று பல செய்திகள் வந்துவிட்டன்.
எல்லாவற்றையும் அவர் பொய்யாக்கிவிட்டார். இன்னும் கட்சி தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.
அண்மையில், வெங்கய்ய நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொண்டு காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினி பேசியது பெரும் சர்ச்சையானது.
அவர் முழுக்க பாஜக ஆதரவாளராக இருக்கிறார் என்கிற விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன,
இந்நிலையில் இன்று, தமிழகமே எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கும், புதிய கட்சிக்கான அறிவிப்பு தமிழ் புத்தாண்டில் அதிகாரப்பூர்வமாக வெளி வர உள்ளது என்றொரு செய்தி வெளியானது.ஒரு மூத்த பத்திரிகையாளர் இச்செய்தியைச் சொன்னதால் அதற்கு முக்கியத்துவம் கிடைத்தது.
உடனே ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து அதுகுறித்து கருத்துத் தெரிவித்து வந்தனர்.
ரசிகர்களின் அம்மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. ரஜினி ரசிகர் மன்றத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஒருவர், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சொன்னார்.
அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள், இம்முறையும் வதந்திதானா? எப்போதுதான் அவர் கட்சி தொடங்குவார்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பதில் சொல்ல ஆளில்லை.