ஜூன் 22 அன்று மதியம், எட்டுவழிச் சாலை அமைப்பதற்கு எதிராக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டார்.
உடனே அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் நாராயணன். இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–
இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தேசத்துக்கு விரோதமாகவும் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டு இயக்கம் எதுவும் இல்லை என்றும், அப்படியொரு சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வடபழனி போலீஸ் நிலையத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிராஜா மீண்டும் வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி கொடுத்துள்ளதால் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி கொடுத்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி போலீசார் நேற்று இரவு புதிய வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதியம் அறிக்கை விட்டதும் உடனே வழக்குப் போட்டிருக்கிறார்கள். இது குறித்து மீண்டும் பேசினால் கைது நடவடிக்கை இருக்கும் என்று சொல்கிறார்கள்.