சென்னையைச் சேர்ந்த திருமணி என்ற இளைஞர் காஷ்மீர் மாநிலத்துக்குச் சுற்றுலா சென்றார். அங்கு பர்காம் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றது.
இந்தக் கல்வீச்சுத் தாக்குதலில், அந்தவழியாகப் பேருந்தில் சென்றுகொண்டிருந்த தமிழக இளைஞர் திருமணி மற்றும் அவருடன் பயணித்த சுற்றுலாப் பயணிகளும் சிக்கிக்கொண்டனர்.
இதில், திருமணிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஶ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு வருகைதந்த மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, திருமணியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது அவர், இந்தச் செயல் எனக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது. இது மிகவும் துயரகரமான சம்பவம். எனது இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது என கூறியுள்ளார்.
அதே போன்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும், தனது தொகுதியில் நடந்த இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து ஒமர் அப்துல்லா கூறியிருப்பதாவது:
சென்னையில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததற்கு ஆழமாக வருந்துவதாகவும், இந்த குண்டர்களை, அவர்களின் வழிமுறைகளை, கருத்தியலைத் தாம் ஆதரிக்கவில்லை.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றவர்கள் விரைவில் குணமடையவேண்டும். “ஜம்மு காஷ்மீர் அரசு தோற்றுப் போனது, முதல்வர் தோற்றுப் போனார், பாஜக-பிடிபி கூட்டணி தோற்றுப் போனது,” “ஒரு சுற்றுலாப் பயணி சென்ற வாகனத்தின் மீது கல்வீசி கொன்றுள்ளோம், விருந்தினரைக் கொன்றுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.