ஜம்மு காஷ்மீரில் தற்போது தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் குறைந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக அண்மையில் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து தீவிரவாதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் அமைந்துள்ளது பைசரன் பள்ளத்தாக்கு.சுற்றிலும் மலை, அதில் உயரமான பைன் மரங்கள் நடுவே பசுமையான புல்வெளி என்று இயற்கை எழில் கொஞ்சும் அந்தப் பகுதி மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது.
அண்மைக் காலங்களில் அந்த மாநிலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பகுதியினர் தவறாமல் வந்து செல்லும் இடமாக பைசரன் பள்ளத்தாக்கு மாறியுள்ளது. கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில், நேற்று வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. புல்வெளியில் குடும்பத்தோடு அமர்ந்திருந்து இயற்கைக் காட்சிகளை இரசித்தபடியும், குழந்தைகளோடு உற்சாகமாக ஓடி விளையாடியும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்திருந்தனர். ஒரு சிலர் அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்கி சாப்பிட்டபடி இருந்துள்ளனர்.
மாலை 3 மணி அளவில் பள்ளத்தாக்கின் பைன் மரக் காடுகளில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென புல்வௌியை நாலாபுறமும் சூழ்ந்தனர்.கையில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் இருந்த தீவிரவாதிகளைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர்களை தீவிரவாதிகள் சுற்றி வளைத்தனர். கண்இமைக்கும் நேரத்தில் சுற்றுலாப் பயணிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குண்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். காயம் அடைந்தவர்கள் எழுப்பிய மரண ஓலம் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது.
பின்னர், தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். பெயர் என்ன? என்று கேட்டு குறிப்பிட்ட சிலரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதாக உயிர் தப்பியவர்கள் கூறினார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்து காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்குச் சாலை வசதி கிடையாது. குதிரை மூலமாகவோ, நடந்தோதான் அங்கு செல்ல முடியும்.இதனால் நிகழ்விடத்தை பாதுகாப்புப் படையினர் சென்றடைய நீண்ட நேரமானது.
அதற்குள் படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதியினர் குதிரைகள் மூலம் அருகில் உள்ள சாலைக்குக் கொண்டு வரத் துவங்கினர். பின்னர், படுகாயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்து விட்டனர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் உயிர் தப்பிய பெண் கூறுகையில்,’ என் கணவர் தலையில் சுடப்பட்டார். அவர் ஒரு முஸ்லீம் இல்லை என்பதற்காகச் சுடப்பட்டார். தாக்குதலில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். சகோதரரே, தயவுசெய்து என் கணவரைக் காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சினார்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பான காணொலிக் காட்சிகள் இணையதளத்தில் வேகமாகப் பரவியது. துப்பாக்கியால் சுடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தரையில் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதையும், அவர்கள் அருகில் பெண்கள் மற்றும் உடன் வந்த உறவினர்கள் அழுதுகொண்டு இருக்கும் காட்சிகளும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவி கேட்டுக் கெஞ்சும் காட்சிகளும் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
தாக்குதல் பற்றிய தகவலை அறிந்ததும் அதிகாரிகள் உடனடியாக ஹெலிகாப்டர்களை வரவழைத்தனர். அதற்கு முன்பு காயமடைந்த சுற்றுலாப் பயணிகளை தங்கள் தோள்களில் ஏற்றி அருகிலுள்ள வாகனம் செல்லக்கூடிய பகுதிக்கு உள்ளூர் மக்கள் கொண்டு சென்றனர். தாக்குதல் பற்றிய தகவல் பரவியதும் பஹல்காமின் சாலைகளும், தெருக்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன.ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ரிசார்ட் நகரத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் கர்நாடக மாநிலம ஷிவமொக்காவை சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத் அவரின் மனைவி பல்லவி கண் எதிரே சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பல்லவி கூறுகையில் ‘சுற்றுலாப் பயணிகள் சுமார் 500 பேர் நின்றிருந்த போது தீவிரவாதிகள் திடீரென்று எங்களைச் சூழ்ந்து கொண்டு சுட்டனர். இந்தத் தாக்குதலில் எனது கணவர் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அங்கே நின்ற தீவிரவாதியிடம் என்னையும் எனது மகனையும் கொன்று விடு என கதறினேன். அப்போது, மோடியிடம் சென்று இதைச் சொல் என தீவிரவாதி ஒருவன் கூறினான். எனது கணவன் உடல் மலை மீது உள்ளது. நாங்கள் மூவரும் ஷிவமொக்கா வருவதற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என கண்ணீருடன் பல்லவி கூறினார்.
இந்தத் தாக்குதல் குறித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில்…..
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இது ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். இது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். அப்பாவிக் குடிமக்கள், சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவது முற்றிலும் பயங்கரமானது, மன்னிக்க முடியாதது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத் தாக்குதல் மனசாட்சியையே உலுக்குகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. சொந்தங்களை இழந்து தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இத்தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரும் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உடனடியாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையரைத் தொடர்பு கொண்டு, ஜம்மு காஷ்மீர் மாநில அதிகாரிகளுடன் பேசி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைத்துத் தர அறிவுறுத்தியிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி,எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி மற்றும் டிரம்ப், புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் டிஆர்எப் எனும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தி ரெசிஸ்டன்ட் படை (டிஆர்எப்) எனும் பெயர் கொண்ட இந்த அமைப்பு, 2019 ஆகஸ்டில் காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு உருவானது.
காஷ்மீர் இளைஞர்களைத் தீவிரவாதப் பாதையில் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டதே இந்த அமைப்பு. 2019 அக்டோபரில் நிறுவப்பட்ட டிஆர்எப்பின் உச்ச தலைவராக இருப்பவர் ஷேக் ஷஜித் குல். தலைமை ஆபரேஷன் கமாண்டராக இருப்பவர் பசித் அகமது தர்.
2023 இல் இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இந்த அமைப்பின் முக்கிய குறி உள்ளூர் மக்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆகியோர்தாம் என்று சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு கந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமானப் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு மருத்துவர் மற்றும் 6 வெளிமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு டிஆர்எப் பொறுப்பேற்றது. வெளிமாநிலத் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் என வெளியில் இருந்து வருபவர்கள் தங்கியிருந்து குடியிருப்புகளை வாங்கி காஷ்மீரின் அடையாளத்தையே மாற்றுகிறார்கள் என்பதும் டிஆர்எப்பின் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று.
இதுபோல 85,000 குடியிருப்புகள் காஷ்மீர் அல்லாதோர் வசம் சென்றுள்ளதாகவும் டிஆர்எப் அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.இதைச் சொல்லியே உள்ளூர் இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறது. எனவே பஹல்காம் தாக்குதலில் டிஆர்எப் தொடர்பு இருக்க அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.அப்படி ஐயப்படக் காரணம், இத்தாக்குதலின் போது ஒவ்வொருவரின் பெயரையும், ஊரையும் கேட்ட பிறகே தீவிரவாதிகள் சுட்டுள்ளனர் என்பதுதான். 2019 காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு நடந்திருக்கும் மிக பயங்கரமான தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்புதான் இந்தத் தாக்குதலையும் நடத்தியிருக்கும் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேற்கொண்டு நடக்கும் விசாரணையில்தான் முழுமையான உண்மை தெரியவரும் என்கிறார்கள்.