இந்தியைத் திணிக்கும் ஒன்றிய பாஜக அதை எதிர்க்கும் மாநில பாஜக – விவரம்

இந்திய ஒன்றியம் முழுதும் இந்தியைத் திணிக்கும் நோக்கத்தோடு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.

இந்தக் கல்விக் கொள்கையை பாஜக ஆளும் மகாராஷ்டிரா அரசு படிப்படியாக அமல் செய்து வந்தது.

அங்கு மராத்தி மற்றும் ஆங்கிலத்தோடு இந்தியும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. மாநில மொழி ஆலோசனைக் குழுவும் இந்தித் திணிப்புக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளது.

எதிர்ப்புகள் வலுத்த நிலையில் புனேயில் பேட்டி அளித்த மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ்…

மகாராஷ்டிராவில் மராத்தி கட்டாயம், இந்தி கட்டாயம் இல்லை.தேசியக் கல்விக் கொள்கையின் படி 3 மொழிகள் போதிக்கப்பட வேண்டும். மாணவர்கள் விரும்பினால் அவர்கள் விரும்பும் மொழியை 3 ஆவது மொழியாகக் கற்றுத்தரலாம். ஆனால் அந்த மொழி கற்கும் 20 மாணவர்களாவது அந்த வகுப்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு ஆசிரியரை நியமிக்க முடியும்

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கல்விக் கொள்கையின் படி மூன்று மொழிகள் கற்பது கட்டாயம் என ஒன்றிய அரசு கட்டாயப்படுத்து வருகிறது.ஆனால் மகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்,மகாராஷ்டிராவில் மராத்தி மட்டுமே கட்டாயம், மூன்றாவது மொழியான இந்தி கட்டாயம் இல்லை என்றும் விரும்பினால் மூன்றாவது மொழி கற்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதன்மூலம், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு செயல்படுத்த முடியாது என்று சொல்லியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

மகாராஷ்டிரா முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஒன்றிய அரசு பதில் என்ன சொல்லப்போகிறது? என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Response