
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடைபெற உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் இந்தத் தேர்வுக்கு இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சத்து 26,725 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் 1 இலட்சத்து 7,288 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்தியா முழுவதும் 2,255 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் 170 மையங்களில் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். பெரும்பாலும் சிபிஎஸ்இ பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமையப் பெற்றுள்ளன.
வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தமிழக மாணவர்கள்: தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் காலை 7.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். ஹால் டிக்கெட் காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்படும். மாணவர்கள் 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் தேர்வு அறைக்குள் ஹால் டிக்கெட்டுடன், அதில் ஒட்டப்பட்டு இருப்பதைப் போன்ற 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை மட்டும் கொண்டு செல்லவேண்டும். பேனா கொண்டு செல்லக்கூடாது. தேர்வு அறையிலேயே பேனா கொடுக்கப்படும். கைக்கெடிகாரம் அணிந்து செல்லக் கூடாது. மாணவர்கள் அரைக்கை சட்டைதான் அணிந்து செல்லவேண்டும். அதில் பொத்தான் பெரிதாக இருக்கக்கூடாது.
தேர்வு மையத்திற்குள் கால்குலேட்டர், செல்போன், கைப்பை, ஹெட்போன், பென்டிரைவ், கேமரா ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
மாணவிகள் சல்வார், பேண்ட் அணிந்து வரவேண்டும். சேலை அணிந்து வர அனுமதி கிடையாது. காதணி, மோதிரம், மூக்குத்தி, சங்கிலி, வளையல் போன்றவை அணிந்திருக்கக்கூடாது. குறைந்த உயரம் கொண்ட செருப்புகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாத மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்
இவ்வாறு இந்த தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.


