ஆதரவற்றோருக்கு உதவ கோவையில் நடந்த பிரமாண்ட கலைவிழா

கோவை இடையர்பாளையம் பகுதியில் கடந்த 28 ஆண்டுகளாக சமூக சேவைகள் செய்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நேட்டிவ் மெடிகேர் சாரிடபிள் டிரஸ்ட்.

இந்தத் தொண்டு நிறுவனம் சார்பில் அபயா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகமும், முதியோர் இல்லமும் நடத்தப்படுகிறது.

இந்தத் தொண்டு நிறுவனம் கோவை மாவட்ட மலை கிராமங்களில் கல்வி முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், பால்வினை நோய் விழிப்புணர்வு, திருநங்கைகள் மேம்பாடு உட்பட பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவன வளர்ச்சிக்காக பிரமாண்டமான நட்சத்திரக் கலை நிகழ்ச்சியை சென்னையைச் சேர்ந்த ஆவணப் பட இயக்குநர் ஆபிரகாம் லிங்கனின் பால் பிரதர்ஸ் பப்ளிசிட்டி அமைப்பு நடத்தியது.

கோவை அவினாசி சாலையில் உள்ள ஹிந்துஸ்தான் கலைக் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கபாலி, 8 தோட்டாக்கள் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த மைம் கோபி குழுவின் பிரமாண்டமான மைம் நிகழ்ச்சி.

துபாய் மதன் விவேகானந்தன் குழுவின் கண் கவர் நடனங்கள். கோவை மாயாஜால நிபுணர் விக்னேஷ் பிரபுவின் பிரமிக்க வைக்கும் மாயாஜாலம், மதுரை சிறுவன் தீபக் ராம்ஜி யின் டிரம்ஸ் இசை , உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதோடு சென்னை மண்டல வருமான வரித்துறை இணை கமிஷனர் நந்தகுமார் ஐஆர்எஸ், திருப்பூர் மாநகர காவல்துறை துணை கமிஷனர் சின்னச்சாமி ஐ.பி.எஸ், கோவை எழுத்தாளர் கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார், நடிகர் மைம் கோபி, துபாய் தொழிலதிபர் மதன் விவேகானந்தன், திருப்பூர் சரஸ்வதி கிரி மெட்ரிக் பள்ளியின் நிர்வாகி ஜெயா மோகன், டாக்டர் பிரகாஷ், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் பாலமுருகன் உட்பட பலருக்கு வாழ்வியல் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பபட்டன.

பிரமாண்டமான கலை விழாவுக்கு முன்னதாக காலையில் நேட்டிவ் மெடிகேர் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இந்த விழாவிலும் நடிகர் மைம் கோபி கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கினார்.

மாலையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.எல்.விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவரது “வனமகன்” பட வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்து “விடியலைத் தேடி” நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கீர்த்தி வாசன், ஸ்ரீராம், ஆபிரகாம் லிங்கன் ஆகியோர் முன்னிலையில் விழா மேடையில் கேக் வெட்டினார்.

மேலும் விழாவில் கதாநாயகன் அபி சரவணன், கல்வியாளர் பிரபாவதி, ஆடிட்டர் பேச்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Response