சூர்யாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் ‘பீட்டா’ தலைவி..!


சமீபத்தில் கோவையில் நடைபெற்ற தனது ‘சி-3’ படத்தின் புரமோஷனில் கூட ஜல்லிக்கட்டு பற்றியும் பீட்டா பற்றியும் பேசினார் சூர்யா.. ஆனால் சூர்யா தான் நடித்துள்ள ‘சி-3’ படத்தை விளம்பரம் செய்ய தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடுகிறார் என்ற ஒரு செய்தியை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது பீட்டா அமைப்பு.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் துவக்கத்தில் இருந்தே ஜல்லிக்கட்டுக்கும் மாணவர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்துக்கும் ஆதரவு கொடுத்து வந்தார் சூர்யா.. அதேசமயம் ஜல்லிகட்டுக்கு தடை ஏற்பட காரணமாக இருந்த பீட்டா நிறுவனத்தையும் முழு மூச்சாக எதிர்த்தும் வந்தார்.. அதுமட்டுமல்ல, பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியும் வந்தார் சூர்யா.

அதனால் உண்மைக்கு முற்றிலும் தவறாக ‘பீட்டா’வின் தலைவியான பூர்வா ஜோஷிபூரா கிளப்பிவிட்ட இந்த செய்தி சூர்யா மற்றும் அவரின் குடும்பத்துக்கு வருத்தத்தை அளித்தது. ஆதலால் தவறான செய்தியை பரப்பி வந்த பீட்டா அமைப்பை மன்னிப்பு கோரும்படியும், அவர்கள் பரப்பிய செய்தி தவறானது என்பதை தெரிவிக்கும் வகையில் பத்திரிகை குறிப்பு ஒன்றை 7 நாட்களுக்குள் வெளியிடும்படியும் கூறி நடிகர் சூர்யாவின் வக்கீல் விஜய் ஆனந்த் பீட்டா அமைப்புக்கு வக்கீல் நோட்டிஸ் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பீட்டா அமைப்பின் நிர்வாக தலைவர் பூர்வா ஜோஷிபூரா, சூர்யாவை பற்றி தவறான ஒரு செய்தியை பரப்பியதற்காக “முழுமனதோடு மன்னிப்பு கேட்கிறேன்“ என்ற வார்த்தையோடு மன்னிப்பு கேட்டு பதில் நோட்டிஸ் ஒன்றை வக்கீல் விஜய் ஆனந்த அவர்களின் மூலம் சூர்யாவிற்கு அனுப்பியுள்ளார்.

Leave a Response