ரஜினி சொன்ன காக்காவை பிடிக்கமாட்டேன் – சத்யராஜ் எள்ளல்

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘’புத்தெழுச்சி நாள் விழா’’ கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில் நேற்று மாலை பெரவள்ளூர் அகரம் சந்திப்பு பகுதியில் நடைபெற்றது.

‘’தமிழாய்ந்த பேரறிவு தலைவர், கலையாவும் நன்கறிந்த கலைஞர்’’ என்கின்ற தலைப்பில் நடைபெற்றது. இதற்கு கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன். வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார் கலந்துகொண்டனர்.

இதில்,நடிகர் சத்யராஜ் பேசியதாவது…..

1967 ஆண்டுக்கு முன்பு நடைபெற்றது பணக்காரர்கள் ஆட்சி.எனக்குத் தெரியும்.1967 அண்ணா தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாடு நிமிர்ந்தது. இதன்பிறகு கலைஞர் ஆட்சிக்கு வந்தார்.கலைஞர் விதைத்த விதைதான் தமிழ்நாட்டை வளமாக்கி தமிழ்நாட்டை எங்கேயோ கொண்டு சென்றுவைத்திருக்கிறது.

அதனை அவ்வாறு பயன்படுத்தியவர் மு.க.ஸ்டாலின். எங்களுக்கு அவர்தான் முதல்வர்.இதன்பின்னர் முதல்வர் பண்பின் முதல்வர் பெருந்தன்மையின் முதல்வர்,எந்தக் கட்சிக்காரனும் தன்னுடைய கட்சிக்காரன் சாகுவான் என ஆசைப்பட மாட்டான் என பேரவையில் பேசினார் நமது முதலமைச்சர்.அவர்தான் பெருந்தன்மையின் முதல்வர், அறத்தின் முதல்வர்,அப்படிப்பட்ட முதலமைச்சர் தான் இன்றும் எனக்கு முதலமைச்சர்.

கலைஞரின் வசனத்தில் நான் இரண்டு படங்கள் நடித்திருக்கிறேன்.தற்போது இங்கு கெத்தாக வந்திருக்கிறேன்.ஆளுங்கட்சியாக இருந்தால் காக்கா பிடிக்க வந்துள்ளேன் என கூறுகிறார்கள்,காக்கா பிடிப்பது என்றால் ரஜினி சொன்ன காக்கா கதை என நினைத்துக்கொள்ளாதீர்கள்.திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது நான் இங்கு கலந்து கொள்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது.

எனக்கும் வாயில் நன்றாக வரும்.எவ்வளவு வேண்டுமானாலும் நன்றாக வரும்.என்னை யார் திட்டினாலும் கவலைப்பட மாட்டேன்.புடுங்கி வீசுவதற்கு ஒன்றுமில்லை.இருந்தாலும் புடுங்கி வீசிவிட்டு சென்று விடுவேன்.எனக்கும் நிறைய கெட்ட வார்த்தைகள் தெரியும்.மரியாதை நிமித்தமாக அமைதியாக இருக்கிறேன்.வாருங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

மு.க.ஸ்டாலின் செய்த நலத்திட்டங்களுக்கு பேரை மட்டும் மாத்தி ஸ்டிக்கர் மாற்றிக்கொள்ளுங்கள்,நீங்கள் பெயரை மட்டும் மாற்றினால் உங்களுக்கு நல்லபெயர் வரும்.ஆனால் ஸ்டாலின்கொண்டு வந்த திட்டத்தை மாற்றினால் சரியாக இருக்காது.முதலமைச்சர் தோற்றவுடன் நன்றி தெரிவிப்பதற்காக கொளத்தூருக்கு சென்றார்.சேவை மனப்பான்மையில் இருக்கின்ற நமது முதல்வர் அன்பின் முதல்வர்,பண்பின் முதல்வர், வெயிலின் அருமை நிழலில் தெரியும் என கூறுவார்கள், நிழல் வேண்டுமென்றால்கூட வெயில் வேண்டும், சூரியன் உதிக்கும்.

சூரியன் நிரந்தரமானது அது அஸ்தமிக்காது. ஏனென்றால் சூரியன் மறையவே இல்லை.அது அங்கேதான் இருக்கும் உலகம்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது.அனேகமாக கலைஞரின் 104வது பிறந்த நாளில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பார். அவருடைய தலைமையில் கலைஞரின் 104வது பிறந்தநாள் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response