
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
இதில், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்காததால்,ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில்,தவெக சார்பில் வெற்றிபெற்ற 108 சட்டமன்ற உறுப்பினர்களில் 70 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையையொட்டியுள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவ்ர்களைச் சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று சொல்லப்படுகிறது. அவர்களைச் சந்திக்க வரும் தவெகவினரைக் கூட அனுமதிக்காமல் ரிசார்ட் நுழைவாயில் பகுதியிலேயே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற்றி வருகின்றனர்.
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தனியார் ரிசார்ட்டை சுற்றிலும் செங்கல்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க விஜய் முயன்றது எடப்பாடி பழனிச்சாமிக்குக் கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதன்காரணமாக விஜய்க்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தவெக கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்க எடப்பாடி தரப்பு முயல்வதாகவும் பரவிய வதந்தியைத் தொடர்ந்து விஜய் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.


