திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் சமஉ – எடப்பாடி அதிர்ச்சி

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில்,ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறும் நிகழ்வுகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன.

இவற்றில், அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் இருந்து பிரிந்து, டிடிவி தினகரன் தொடங்கிய அமமுகவில் இணைந்தார்.கடந்த 2021தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் தற்போது அதிமுகவில் இருந்து விலகிய மாதேஸ்வரன், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.சிவலிங்கம் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார்.

தன் சொந்த மாவட்டமான சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் திமுகவில் இணைந்தது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்கிறார்கள்.

அவரைத் தொடர்ந்து மேலும் சில அதிமுக மற்றும் அமமுக முன்னணியினர் திமுகவில் இணையவிருப்பதாகப் பரவும் தகவல் அரசியலரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response