
வங்கக் கடலில் நிலவும் `டிட்வா’ புயல் இன்று காலை சென்னையை நெருங்குகிறது. இதையொட்டி, திருவள்ளூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது….
தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில் ‘டிட்வா’ புயல் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வடமேற்காக நகர்ந்து இன்று (நவம்பர் 30) காலை வடதமிழ்நாடு மற்றும் அதையொட்டிய தெற்கு
ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இன்று மாலை புயல் சென்னையை நெருங்கி வரும்.
இதன் காரணமாக, இன்று வட தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு
இடங்களிலும், புதுச்சேரியிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா, தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சம் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் 80 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
இன்று திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகனமழை (சிவப்பு எச்சரிக்கை) பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையும், மற்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 90 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
புயல் நேரத்தில் வீட்டிலேயே இருக்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.


