யாழ்ப்பாணத்தில் புத்த சின்னம் அமைக்க மக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலை கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்று சனிக்கிழமை அதிகாலை ஒரு சிலை வைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

அங்கு புத்தர் சிலை வைக்கப்படுவதாக பொதுமக்கள் நினைத்திருந்தனர்.எனினும் அது புத்தர் சிலை அல்ல எனவும், அது சங்கமித்ரையின் சிலை என சிறைச்சாலை அதிகாரிகளால் கூறப்பட்டது.

இதனையடுத்து அந்தச் சிலை பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு உதவி சிறைச்சாலை அதிகாரியாகப் பணியாற்றுபவரின் வழிகாட்டலிலேயே இந்தச் சிலை சிறைச்சாலைக்கு முன்பாக வீதியில் அமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சிலை கைதி ஒருவரால் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. சிறைச்சாலைக்கு உள்ளே இருந்த இந்தச் சிலை நேற்று சிறைச்சாலைக்கு வெளியே எடுத்து வரப்பட்டது. அந்தச் சிலையை மூடி துணியால் கட்டடப்பட்டிருந்தது.

முன்னதாக சங்கமித்ரை தோணியின் மூலம் மாதகல் கரையில் வந்திறங்கிய காட்சி சிறைச்சாலையின் சிலை வைக்கப்பட்ட இடத்தில் வரையப்பட்டது.

இவ்வாறு சிறைச்சாலைக்கு வெளியே வீதியில் பௌத்த சின்னங்கள் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்த இடத்தில் இன்று காலை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களும் பொது மக்களும் கூடினர்.

அவர்களின் எதிர்ப்பால் சர்ச்சைக்குரிய சிலை அந்த இடத்திலிருந்து சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

இதேவேளை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சங்கமித்ரையின் வரலாற்றைச் சித்தரிக்கும் ஓவியம் போன்று, யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னான சங்கிலியனின் வரலாற்றைச் சித்தரிக்கும் ஓவியத்தை வரைய அனுமதிக்க வேண்டும் என சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரினார். அதற்கு எழுத்து மூலம் அனுமதி கோருமாறு சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Response