தடுமாறிய அணி தாங்கிப் பிடித்த கோலி – இந்தியா வெற்றி

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.

இந்திய அணியில் காயமடைந்த தீபக் சாஹருக்கு பதிலாக அறிமுக வீரராக நவ்தீப் சைனி இடம் பிடித்தார். மேற்கிந்தியத் தீவு அணியில் மாற்றம் இல்லை.

இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் மேற்கிந்தியத் தீவுகளை பேட் செய்யப் பணித்தார். இதன்படி இவின் லீவிசும், ஷாய் ஹோப்பும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர்.

பொறுமையாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் (15 ஓவர்) எடுத்த நிலையில் பிரிந்தனர். லீவிஸ் 21 ரன்னில் (50 பந்து) கேட்ச் ஆனார். ஷாய் ஹோப் (42 ரன்) முகமது ஷமியின் பந்துவீச்சில் கிளின் போல்டு ஆனார்.

இதன் பின்னர் ஆல்- ரவுண்டர் ரோஸ்டன் சேசும், ஹெட்மயரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இருவருக்கும் தலா ஒரு கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கோட்டை விட்டார். ஹெட்மயர் (37 ரன், 33 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அதிரடியை ஆரம்பித்த சமயத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். நவ்தீப் சைனி வீசிய ஷாட்பிட்ச் பந்தை தூக்கியடித்த போது ஹெட்மயர் கேட்ச் ஆகிப் போனார். சைனியின் இன்னொரு ஓவரில் ரோஸ்டன் சேஸ் (38 ரன்) யார்க்கருக்கு வீழ்ந்தார்.

அப்போது அந்த அணி 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் (31.3 ஓவர்) எடுத்திருந்தது. ரன்ரேட்டும் 5-க்கும் குறைவாக காணப்பட்டது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் நிகோலஸ் பூரனும், அணித்தலைவர் பொல்லார்ட்டும் கைகோர்த்தனர். படிப்படியாக ரன்ரேட்டை உயர்த்திய இந்த கூட்டணி, இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தது.

வலுமிக்க ஷாட்டுகளை அடிப்பதில் வல்லவரான பொல்லார்ட், குல்தீப் யாதவின் ஓவர்களில் தலா 2 சிக்சர் வீதம் பறக்க விட்டார். நிகோலஸ் பூரனும் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டிய வண்ணம் இருந்தார். இதனால் 260-270 ரன்கள் எடுப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருந்த அவர்களின் ஸ்கோர் அதையும் மிஞ்சியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதிக்கட்டத்தில் துல்லியமான யார்க்கர் வீச முடியாமல் திணறினர்.

நவ்தீப் சைனியின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை சாத்திய நிகோலஸ் பூரன், ஷர்துல் தாகூரின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓடவிட்டார். மறுபடியும் பந்தை எல்லைக்கோட்டுக்கு துரத்த முயற்சித்த நிகோலஸ் பூரன் (89 ரன், 64 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆகிப்போனார். இதன் பின்னர் கடைசி இரண்டு ஓவர்களில் 2 பவுண்டரி, 3 சிக்சர் கிளப்பிய பொல்லார்ட் அணியை 300 ரன்களையும் கடக்க வைத்தார்.

50 ஓவர் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்ட பொல்லார்ட் 74 ரன்களுடனும் (51 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), ஹோல்டர் 7 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் அவர்கள் 118 ரன்கள் சேகரித்து மிரட்டினர்.

அடுத்து 316 ரன்கள் இலக்கை நோக்கிக் களம் புகுந்த ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவுக்கு அற்புதமான தொடக்கம் உருவாக்கித் தந்தனர். அவ்வப்போது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்திய இவர்கள் 15-வது ஓவரில் அணியின் ஸ்கோரை 100 ரன்களை எட்ட வைத்தனர்.

அணியின் ஸ்கோர் 122 ரன்களாக உயர்ந்த போது ரோகித் சர்மா 63 ரன்களில் (63 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஹோல்டரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பிடம் பிடிபட்டார். அடுத்து விராட் கோலி நுழைந்து, சூழ்நிலையை உணர்ந்து ஆடினார். இன்னொரு பக்கம் தனது பங்குக்கு 77 ரன்கள் (89 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) சேர்த்த நிலையில் ராகுல் வெளியேறினார்.

அதன் தொடர்ச்சியாக ஸ்ரேயாஸ் அய்யர் (7 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (7 ரன்), கேதர் ஜாதவ் (9 ரன்) அடுத்தடுத்து நடையை கட்ட, இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. கடைசி 10 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 79 ரன்கள் தேவையாக இருந்தது.

இருப்பினும் விராட் கோலி களத்தில் நின்றதால் நம்பிக்கை தளரவில்லை. அவருக்கு ரவீந்திர ஜடேஜா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். வெற்றியை நோக்கிப் பயணித்த முக்கியமான தருணத்தில் விராட் கோலி (85 ரன், 81 பந்து, 9 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.இந்தச் சூழலில் ஷர்துல் தாகூர் வந்தார். சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு அசத்திய ஷர்துல் தாகூர், காட்ரெலின் பந்து வீச்சில் ஒரு சிக்சரும், பவுண்டரியும் விளாசி ஆச்சரியப்படுத்தினார். இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி தணிந்தது. கடைசி 2 ஓவர்களில் 7 ரன் தேவைப்பட்டது. 49-வது ஓவரை வீசிய கீமோ பாலின் பந்துவீச்சில் ஜடேஜா பவுண்டரி அடிக்க அதன் மூலம் வெற்றிக்கனி இந்தியாவுக்கு கனிந்தது.

இந்திய அணி 48.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 316 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. ஜடேஜா 39 ரன்களுடனும் (31 பந்து, 4 பவுண்டரி), ஷர்துல் தாகூர் 17 ரன்னுடனும் (6 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். கோலி ஆட்டநாயகனாகவும், ரோகித் சர்மா தொடர்நாயகனாகவும் (3 ஆட்டத்தில் 258 ரன்) அறிவிக்கப்பட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன.

ஒரு நாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக வென்ற 10-வது தொடர் இதுவாகும். ஏற்கனவே 20 ஓவர் தொடரையும் 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

Leave a Response