
அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த ஈரான் நீண்டகாலமாக மறுத்து வருவதால், அதன் மீது தாக்குதல் நடத்தி அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதுதான் தீர்வு என அமெரிக்க அதிபர் டரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதிக்குச் செல்ல அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த ஈரான் 10 நாட்களுக்குள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் மோசமான
விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறியது.
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க முகாம்களில் அமெரிக்க விமானப் படையின் போர் விமானங்களும், சரக்கு விமானங்களும் குவிக்கப்பட்டன.
இதனால் உருவான போர்ப் பதற்றத்தைத் தணிக்கவும், அமெரிக்கா, ஈரான் இடையே இருதரப்பு அமைதி
ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் ஓமன் வெளியுறவு அமைச்சர் பஃதர் பின் ஹமாத் அல் புசைடி நேரடியாக அமெரிக்காவுக்குச் சென்றார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் (ஈரானில் காலை 9.30 மணி) ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீரென உத்தரவிட்டார்.
ஈரான் தாக்குதல் தொடர்பாக மத்திய கிழக்கில் உள்ள நட்புநாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்,
கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கும் அமெரிக்க அரசு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் மட்டும் கலந்தாலோசித்து ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில்தான், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அயத்துல்லா அலி காமேனியின் அலுவலகங்கள், அதிபர் மசூத் பெஜஸ்கியான் ஆகியோரது அலுவலகங்கள், இல்லங்களைக் குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கப் படைகள் நேற்று வான்தாக்குதல் நடத்தின.
இதில் ஈரான் தலைவர் காமேனியின் இல்லம் அருகே பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்தன.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதும், ஈரான் பதில் தாக்குதலில் இறங்கியது. இஸ்ரேல் நோக்கி ஈரான் தொலைதூர ஏவுகணைகளை வீசியது. இவற்றை இடைமறித்து அழிக்கும்
நடவடிக்கையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டன.
இதனிடையே, “உலகின் தீவிரவாத மையமாக ஈரான் உருவெடுத்து உள்ளது.அண்மையில் ஈரான் அரசுக்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கான மக்களை அந்த நாட்டு இராணுவம் கொன்று குவித்தது. அணு ஆயுதத் திட்டத்தை கைவிட அந்த நாடு மறுக்கிறது.அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஈரான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக நீடிக்கிறது. இந்த அச்சுறுத்தலை முறியடிக்கவே தற்போது அந்த நாடு மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு இருக்கிறது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் கமேனியின் இருப்பிடம் முற்றிலும் தரைமட்டமானதாகவும், நவீனத் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவர் இருந்த இடத்தை உறுதி செய்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கமேனியின் மரணம் குறித்து ஈரான் அரசு ஊடகங்கள் இதுவரை அதிகார்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம், இது உளவியல் போர் என்று மட்டும் கூறி கமேனி உயிருடன் இருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்து வருகிறது.
திடீரென ஏற்பட்டிருக்கும் இந்தப் போரால், உலகின் பெரும்பாலான நாடுகளும், மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


