புரட்சிப்பாவலர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகை மற்றும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த புரட்சிப்பாவலர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், சட்டப்பேரவையில் 2025 ஏப்ரல் 22 ஆம் தேதி 110- விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும்’ என அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறையால் இதற்காக ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வழிகாட்டுதலின்பேரில், தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, கலை பண்பாட்டுத் துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து ஏப்ரல் 29 முதல் மே.5 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப்போட்டிகள் ஆகியனவற்றை நடத்தின.
தமிழ் வார விழாவின் நிறைவு நாளான நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிறைவுவிழா நடைபெற்றது.
விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறைச் செயலர் க.மணிவாசன், செய்தித்துறைச் செயலர் வே.ராஜாராமன், இயக்குநகர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில், தமிழ் வளர்ச்சித் துறைசார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ.பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு மரபுரிமையினருக்கும், கொ.மா.கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா ரூ.10 இலட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், கலை பண்பாட்டுத் துறையின் இசைக் கல்லூரிகள் மற்றும் கவின்கலை கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பாரதிதாசன் அவர்களின் பெருமையைப் போற்றும் இசை, நடனம் மற்றும் ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் முதலமைச்சர் பரிசுகளை வழங்கினார்.
விழாவில், பல்லவி இசைக் குழுவினரின் ‘பாவேந்தரின் எழுச்சிப் பாடல்களும்’, நரேந்திர குமார் நடன அமைப்பில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவியர்களின் தமிழ் அமுது- நாட்டிய நிகழ்ச்சியும், அனர்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ நடன நிகழ்ச்சியும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் ‘பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா.. சமூக உணர்வா.. என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றன.