அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அதிமுக மற்றும் அதிலிருந்து பிரிந்தவர்கள் அளித்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. அதன்படி, தேர்தல் ஆணையம் சார்பில் ஏப்ரல் 28 ஆம் தேதி, அதிமுக மற்றும் ஓபிஎஸ், ஓ.பி.இரவீந்திரநாத், சூரியமூர்த்தி, இராம்குமார் ஆதித்யன், வா.புகழேந்தி உள்ளிட்டோர் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்கள், மக்கள் பிரிதிநிதித்துவ சட்டவிதி, பாரா 15 இன் கீழ் வருகிறதா என விசாரணை நடத்தினர்.
அப்போது அதிமுக சார்பில் ஆஜரான சி.வி.சண்முகம் தரப்பில், “இவர்கள் யாரும் அதிமுக உறுப்பினர்கள் இல்லை. அதனால் இவர்களின் மனுக்களை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது. அனைவரின் மனுக்களும் பாரா 15-ன்கீழ் விசாரிக்க உகந்ததா என தேர்தல் ஆணையம் முடிவெடுத்த பின்னர், வரும் வாரங்களில் மீண்டும் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, சி.வி.சண்முகம் வாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில், புதிய மனுவை ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறியதாவது,தேர்தல் ஆணையத்தின் கோப்புகள்படி இன்று வரை ஓபிஎஸ்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். அதை தேர்தல் ஆணையம் இதுவரை இரத்து செய்யவில்லை. அதனால் அவர் அதிமுக உறுப்பினர் இல்லை என சி.வி.சண்முகம் சொல்ல முடியாது. இந்த வாதத்தைத் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்தோம். அதை ஏற்றுத்தான், எடப்பாடியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஓபிஎஸ் உள்ளிட்டோர் மனுக்கள் மீது விசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளரை தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த விதியை மட்டும் எப்போதும் மாற்றமுடியாது. ஆனால் அந்த விதிகளைத் திருத்தி எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவி செல்லாது. ஒரு கட்சியில் பிரச்சினை இருக்கும்போது, ஒரு தரப்புக்கு அந்தக் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கக்கூடாது என்பது பொதுவிதி. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைவர் ஓபிஎஸ், வழக்கறிஞர்களுடன் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். அதில், சி.வி.சண்முகத்தின் வாதத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி விரைவில் புதிய மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை உய்ர்நீதிமன்றத்தைப் பின்பற்றி தேர்தல் ஆணையமும் எங்கள் வாதத்தை ஏற்கும் என்று நம்புகிறோம் என்று அவர்கள் நம்பிக்கையாகச் சொல்கின்றனர்.