ஏழு மாதங்களுக்குப் பிறகு பதவி விலகினார் செந்தில்பாலாஜி – விவரம்

2024 செப்டம்பரில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு துணைமுதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார். மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், இராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டு, நாசர், கோவி.செழியன், இராஜேந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் இப்போது மீண்டும் அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகினார். 2024 செப்டம்பர் 26 ஆம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அவர் அமைச்சரானார்.

இதுகுறித்து கடும் விமர்சனங்களைத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், ‘‘பிணை வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் (இன்று) முடிவு செய்து பதில் அளிக்க வேண்டும்’’ என்று கெடு விதித்தது.இதனால் ஏழு மாதங்களுக்குப் பிறகு அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

இதேபோல, சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார். உச்சநீதிமன்றத்துக்குச் சென்று, தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால், அவர் மீண்டும் அமைச்சரானார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை அன்பகத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுபடுத்திப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அமைச்சர் பதவியில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.இந்த விவகாரத்தில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யவும், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் அமைச்சர் பதவிவிலகல் கடிதம் கொடுத்துள்ளனர்.

அமைச்சரவையை 6 ஆவது முறையாக மாற்றம் செய்வது தொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது….

மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனம், காதி துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரின் பதவி விலகலை ஏற்குமாறு ஆளுநருக்கு முதலமைச்சர் பரிந்துரை செய்தார். அதை ஏற்று, அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு மின்துறையும், வீட்டுவசதி, நகர்ப்புறமேம்பாட்டுத் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் இராஜகண்ணப்பனுக்கு வனம், காதி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் ஏப்ரல் 28 ஆம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, முதலமைச்சரின் பரிந்துரையை, ஏற்று பத்மநாபபுரம் சமஉ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார் என்றும் ஆளுநர்மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோதங்கராஜுக்கு, தற்போது இராஜகண்ணப்பனிடம் இருக்கும் பால்வளத்துறை மீண்டும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தால் செந்தில்பாலாஜியும் உயர்நீதிமன்றத்தால் பொன்முடியும் பதவி இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response