உலகிலேயே முதன்முறையாக ஒரு மொழியின் அடிப்படையில் வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது. அந்த நாடு உருவானதன் போராட்டப் பின்னணியில்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேசக் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, வங்கதேசத்தின் மொழிப் போர் தொடங்கிய பிப்ரவரி 21 ஆம் தேதியை உலகத் தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என 1999 நவம்பர் 17 இல் தீர்மானம் நிறைவேற்றியது. பின்பு, ஐக்கிய நாடுகள் அவையும் தனது உறுப்பு நாடுகள் இதைக் கொண்டாட வேண்டுமென பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதனை ஒட்டியே ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் நாள் உலக தாய்மொழி நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
உலக தாய்மொழிகள் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில்,
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!
இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!
உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்துவருகிறது. இதை நடைமுறைப்படுத்தா விட்டால் தர வேண்டிய 2500 கோடி நிதியைத் தர முடியாது என ஒன்றிய அமைச்சர் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.
இச் சூழலில், பிறமொழி துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி என்று தமிழ் மொழி பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருப்பது ஒன்றிய அரசுக்குக் கொடுத்திருக்கும் சூடு என்று பலரும் சொல்கின்றனர்.