மதுரையில் நேற்று விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது…..
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனையாக மரணதண்டனை வழங்க வேண்டும். அப்பொழுது தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
நடிகர் விஜய்யை தமிழ்நாடு முழுவதும் பட்டி, தொட்டி முழுவதும், செந்தூரப்பாண்டி படம் மூலம் விஜயகாந்த் தான் கொண்டு போய்ச் சேர்த்தார். சினிமா வேறு, அரசியல் வேறு. அறையில் நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு பேசுவதை விட்டுவிட்டு பொதுவெளியில் வந்து மக்களை, பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டும். மக்கள் பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும். நடிகர் விஜய் யாருடன் கூட்டணி, யாரோடு வரப் போகிறார்? என்பதையெல்லாம் அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் இன்று நேற்றல்ல இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பியாக எத்தனையோ வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடம் வராத புது பிரச்னை இப்போது ஏன் வருகிறது? இதற்குப் பின்னே முற்றிலும் அரசியல் இருக்கிறது. மதத்தை, ஜாதியை பிரித்து அரசியல் பண்ணப் பார்க்கிறார்கள். உண்மையில் சகோதர சகோதரிகளாக வாழ்கின்ற இந்துக்கள் மத்தியிலும் இஸ்லாமியர்கள் மத்தியிலும் எந்தப் பிரிவினையும் இல்லை. பாஜவுடன் கூட்டணி என்ற ஒரு எண்ணம் எங்களுக்குக் கிடையாது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. எப்படி எல்லாமோ அரசியலில் மாற்றம் வரலாம். யார் யாருடன் கூட்டணி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் விஜய்யை விஜயகாந்த்தான் பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தார் என்றதும் விஜய் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறியதும் விஜய்யை வம்புக்கிழுத்து வம்பில் மாட்டிவிடும் போக்கு என்று சொல்லி விஜய் கட்சியினர் வருந்துகின்றனர்.