தமிழ் மொழித் தியாகிகள் நினைவுநாள் இன்று – வரலாறு அறிவோம்

1938 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர். பல்லாயிரம் பேர் சிறை சென்றனர். சென்னை அடையார், தியாசபிகல் பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சென்னை, பெரம்பூர் பண்ணைக்கார ஆண்டியப்பன் தெருவில் வசித்துவந்த இலட்சுமணன்-அம்மாக்கண்ணு இணையருக்கு 1919 ஆம் ஆண்டு பிறந்த நடராசன் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் சிறையில் நோயால் பல நாட்கள் அவதிப்பட்ட அவர் 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் 1939 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் தேதி தமிழுக்காக தன்னை முதற்பலியாக்கி கொண்டார்.

குமாரராஜா முத்தையா செட்டியார் விருப்பப்படி மருத்துவமனையிலிருந்து தன்னுடைய உடல் மேல் கறுப்புக் கொடி போர்த்தி பெரும் ஊர்வலமாக நடராசனின் பூதவுடல் எடுத்து செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் அண்ணா, தர்மாம்பாள், அ. பொன்னம்பலம், கு.மு.அண்ணல் தங்கோ. ஆல்பர்ட் ஜேசுதாசன், நாராயணி அம்மையார் முதலானோர் புகழுரையாற்றினர். நடராசனின் இழப்பு, மேலும் பலரையும் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தது.

பள்ளிகளில் கட்டாய இந்திக்கு எதிரான மொழி போராட்டத்தில் உயிர் நீத்த நடராசனுக்கு அடுத்து, இரண்டு மாதங்களில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த வேல்முருகன்-மீனாட்சி இணையருக்கு பிறந்த தாளமுத்து என்ற இளைஞரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று மறியல் செய்ததற்காக 6 மாத கடுங்காவல் பெற்று சிறைப்பட்ட 3 வாரங்களுக்குள் கடந்த 1939 ஆம் ஆண்டு மார்ச்.11 ஆம் தேதி உயிரிழந்தார். மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த நடராசன் – தாளமுத்து இருவரும் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்று இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள்.

1939 ஆம் ஆண்டுக்குப் பிறகு 1964 ஆம் ஆண்டு மீண்டும் இந்தி எதிர்ப்புப் போர் வெடித்தது.அப்போது பத்து ஈகிகள் தம் இன்னுயிரை ஈந்தனர்.

1. கீழப்பழுவூர் சின்னச்சாமி, பிறப்பு: 30.7.1937, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.

2. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு: 26.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.

3. விருகம்பாக்கம் ஏ.அரங்கநாதன், பிறப்பு: 27.12.1931, இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.

4. சிவகங்கை இராசேந்திரன், மாணவர். பிறப்பு: 16.7.1945, இறப்பு: 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.

5. கீரனூர் முத்து, பிறப்பு: 15.1.1943, இறப்பு: 27.1.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.

6. சத்தியமங்கலம் முத்து, பிறந்த ஆண்டு: 1943, இறப்பு: 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.

7. ஆசிரியர் வீரப்பன், பிறப்பு: 1.4.1938, இறப்பு: 11.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.

8. விராலிமலை சண்முகம், பிறப்பு: 11.8.1943, இறப்பு: 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.

9. கோவை பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர், பிறந்த ஆண்டு: 1944, இறப்பு: 2.3.1965, பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.

10. மயிலாடுதுறை சாரங்கபாணி, பி.காம்.மாணவர், பிறந்த ஆண்டு: 1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.

இந்த ஈகங்களுக்குப் பின் 1967 இல் நடந்த தேர்தலில் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.அதற்கு இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் முக்கியக் காரணமாக அமைந்தது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கீழப்பழுவூர் சின்னச்சாமி தீக்குளித்து உயிரிழந்த சனவரி 25 ஆம் நாள் தமிழ்நாட்டில் மொழிப் போர் ஈகிகள் நாளாக அறிவிக்கப்பட்டுக் கடைபிடிக்கப்படுகிறது.

1939 இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர்கள் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் அவர்கள் நினைவிடத்தை சென்னை மூலக்கொத்தளத்தில் பெரியார் திறந்து வைத்தார்.

அந்த நினைவிடத்தினைப் பொலிவேற்றம் செய்திடவும், சனவரி 25 தினத்தை தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள் என்னும் பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்தது. அதன்படி, இன்று பொலிவேற்றம் செய்யப்பட்ட நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.

Leave a Response