கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா பத்திரிகை நடத்திய இலக்கிய விழா கூட்டம் நேற்று (நவம்பர் 2) நடந்தது.அதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது….
மருத்துவத் தேர்வுக்கும் சமஸ்கிருதத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? நிச்சயம் இல்லை என்பதுதான் பதில்.
இன்று எப்படி நீட் தேர்வு எளிய பின்புலம் கொண்ட, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை மறுக்கிறதோ அது போல நூறாண்டுகளுக்கு முன்பு 1920-களில் பல மாணவர்கள் மருத்துவம் பயில சமஸ்கிருதம் தடையாக இருந்தது.
1920-களில் அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியருக்கு மாத சம்பளம் ரூ.200. அதுவே தமிழ்ப் பேராசிரியருக்கு சம்பளம் ரூ.70. சமஸ்கிருத மொழியினால் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதாயம் அடைந்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களை சேர்ந்த மக்கள் பாசிசத்துக்கு எதிராக நிற்கிறார்கள்.
அதற்கு காரணம் இங்கு முன்னெடுக்கப்பட்ட முற்போக்கு ரீதியான அரசியல்.
திராவிட இயக்கத்தின் சுயமரியாதை இயக்கம் தமிழை தனது அடையாளத்தின் மையமாக வைத்தது. இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்ச் சமூகத்தின் எதிர்ப்புக் குரலாக இருந்தது. சமஸ்கிருதம் இல்லாத தமிழ்ச் சொற்கள் உருவாகின. 1950-களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் சமஸ்கிருதமயமாக இருந்தது.அது அறிவியல் விஞ்ஞான பூர்வமற்ற கருத்துகளைப் பேசியது.அதனை எளிய மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அந்த நிலையை மாற்றியதும் திராவிட இயக்கம் தான். ஆழமான அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க சினிமா வலுவான ஊடகமாகப் பயன்பட்டது.அரசியல் பின்புலம் கொண்ட கதைகள் மக்களிடம் பேசப்பட்டது. வசனம் எழுதுவது கலைத்துவ பணியானது.அந்த கருத்துகள் நகரம், கிராமம் என அனைத்துத் தரப்பு மக்களையும் சென்று சேர்ந்தது.
1949 இல் வெளிவந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா ‘வேலைக்காரி’ மற்றும் கலைஞரின் ‘பராசக்தி’ போன்ற படைப்புகள் திராவிட சித்தாந்தத்தைப் பேசின. அதன் தாக்கம் அரசியல் ரீதியான மாற்றங்களுக்கு வித்திட்டது. அன்றே பாலின பாகுபாட்டை கேள்வி எழுப்பினார் பெரியார்.
இன்று தமிழ் சினிமா பல கோடி வணிகமாக மாறி உள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களுக்கும் இதே நிலை தான். இதற்கு முக்கிய காரணம் மொழியை விட்டுக்கொடுக்காமல் இருந்தது தான். தென்னிந்தியாவில் நிலவும் அதே நிலை தான் வட இந்தியாவிலும் இருக்கிறதா என்று நாம் பார்த்தால் இல்லை என்று தான் சொல்வோம். அங்கு பல மொழிகள் இந்திக்கு வழிவிட்டன. இப்போது இந்திப் படங்கள் மட்டுமே அங்குள்ளன.
1930 மற்றும் 1960 என இல்லை இன்றும் இந்தி மொழியைத் திணிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. கடந்த மாதம் தமிழ்நாட்டின் தூர்தர்ஷன் இந்தி மாதத்தைக் கொண்டாடியது. அதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதனை எதிர்த்து திமுக குரல் கொடுத்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்
இவ்வாறு அவர் பேசினார்.