கேரளாவிலும் நாம்தமிழர்கட்சி போட்டி- மலையாளிகளுக்கு அதிர்ச்சி தரும் சீமான்

நாம் தமிழர் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

இந்த வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் கடலூரில், இன்று (13–ந்தேதி) மாலை நடக்கிறது. இதில் 234 தொகுதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் தோன்றுகிறார்கள்.

இது தொடர்பாக சீமான் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: –

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி அதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளாலுமே தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. அக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ள மற்ற அரசியல் கட்சிகளாலும் அது சாத்தியப்படாது. நாம் தமிழர் கட்சியால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே’’ ‘‘தலைநகரை மாற்றுவோம், தமிழகத்தையே மாற்றுவோம்’’ என்கிற முழக்கங்களுடன் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

கடலூரில் நாளை நடக்கும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களும் தோன்றுகிறார்கள். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள மாநிலம் மூணாறு சட்டமன்றத் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது எனதெரிவித்தார்.

தமிழகம் மட்டுமின்றி கேரளத்திலும் போட்டியிடுவோம் என்று சீமான் சொல்லியிருப்பது தமிழகத்தில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மலையாளிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

Leave a Response