18 ஆவது மக்களவைத் தேர்தலில் வென்று தொடர்ந்து, ஜூன் ஒன்பதாம் தேதியன்று மூன்றாம் முறையாக பிரதமர் பதவி ஏற்றார் மோடி.
பதவியேற்ற பிறகு, நேற்று முன்தினம் தனது சொந்த தொகுதியான உபி மாநிலம் வாரணாசி சென்றார். அங்கு மிகப்பிரமாண்ட பேரணி நடத்தினார். அதை தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக வாரணாசியில் ரோட்ஷோ எனும் சாலைப் பேரணி நடத்தினார்.
வழக்கமாக சாலைப் பேரணிகளின் போது பூக்கள் தூவி அவரை வரவேற்பார்கள். ஆனால்,முதன்முறையாக அதிர்ச்சிகரமான நிகழ்வு நடதுள்ளது.
வாரணாசியில் பிரதமர் மோடியின் ரோட் ஷோவில் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. அவரது கார் மீது செருப்பு வீசியது யார்? என்பது தெரியவில்லை.
இதுதொடர்பான காணொலி நேற்று முதல் இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
வாரணாசி வீதிகளில் முழுப் பாதுகாப்பு கான்வாய் மத்தியில் பிரதமர் மோடி கார் சென்ற போது அவரது முன்புறம் காரில் செருப்பு வீசப்பட்டது. நெரிசலான பகுதி வழியாக சென்றபோது அந்த செருப்பு வீசப்பட்டுள்ளது. இதையடுத்து மோடியின் காரின் இருபுறமும் தொங்கி வரும் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் அந்தச் செருப்பை எடுத்து மக்கள் மீதே வீசுகிறார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதால் அப்பகுதி பாதுகாப்பு அதிகாரிகளும் பாஜக பொறுப்பாளர்களும் பதட்டமடைந்திருக்கிறார்கள்.