உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) காவல்துறையினர் டெல்லியில் பிப்ரவரி 24 ஆம் தேதி கைது செய்தனர்.
இதன் பின்னணியில் செயல்பட்டது திரைப்படத தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் மார்ச் 9 ஆம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
அவரை டெல்லி என்சிபி காவல்துறையினர காவலில் எடுத்து விசாரித்தனர். சென்னைக்கு அழைத்து வந்தும் விசாரணை நடத்தினர். பின்னர், மீண்டும்டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டதும் முன் எப்போதும் இல்லாத வழக்கப்படி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் செய்தியாளர்களிடம் அவ்வழக்கு குறித்துப் பேசியிருந்தார். அப்போது வழக்கின் போக்கை திசைதிருப்பும் விதமாக அவருடைய பேட்டி இருந்தது என விமர்சனங்கள் வந்தன.
இந்நிலையில் ஊடகவியலாளர் அரவிந்தாக்சன், ஞானேஸ்வர்சிங் மீது புகார் அளித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,டெல்லியில் 15/02/2024 அன்று 50 கிலோ pseudoephedrine பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக,NCB- டெல்லி மண்டல அலுவலகத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை அரசியல் உள்நோக்கத்துடன்
கையாண்டதாக NCB-ன் DDG திரு.ஞானேஸ்வர் சிங்கிற்கு எதிராக 12-03-24 அன்று உள்துறைச் செயலாளர் மற்றும் NCB-ன் தலைமை இயக்குநருக்கு புகார் கொடுத்திருந்தேன்.
சமூக வலைத்தளங்களில் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய விசயங்களைக் கண்டறியாமல் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்துடன் விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தேன்.
என்னுடைய புகாரை ஏற்றுக்கொண்ட NCB தலைமை இயக்குநர், திரு.ஞானேஸ்வர் சிங்கிற்கு எதிரான புகாரை விசாரிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்
மேற்கு மண்டல துணை தலைமை இயக்குநர் திரு.மணீஷ் குமார் IRS விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஞானேஸ்வர்சிங் மீதான விசாரணை என்பது இந்த வழக்கின் தன்மையை வெளிக்கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க இன்னொரு புறம், ஜாபர்சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பல பொருட்கள் நீதிமன்றத்தில் கணக்குக் காட்டப்படவில்லை என்கிற பரபரப்புத் தகவல் உலவுகிறது.
சுமார் எட்டு இலட்சம் ரொக்கம், விலை உயர்ந்த இரண்டு மகிழுந்துகள்,பத்து விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் ஏராளமான தங்க நகைகள் ஆகியனவற்றை எடுத்துச் சென்றனராம். ஆனால், அவை குறித்து நீதிமன்றத்தில் எந்தத் தகவலும் சொல்லவில்லை என்கிற அதிர்ச்சித் தகவல் ஜாபர்சாதிக் வட்டாரங்களில் உலாவந்து கொண்டிருக்கிறது.
என்னங்க நடக்குது?